ipl 2020 to introduce no ball umpire and power player - 'நோ பால் அம்பயர்' , 'பவர் பிளேயர்' - ஐபிஎல்லை அலங்கரிக்கப் போகும் இரு X-Factor
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், ''நோ பால் அம்பயர்' , 'பவர் பிளேயர்' இரு ஜிம்மிக்ஸ்களை அறிமுகம் செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு. இதுகுறித்த தகவல்களை கடந்த இரு நாட்களாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்விரு புதிய முறை குறித்த எளிய புரிதல் இதோ,
Advertisment
பவர் பிளேயர்:
இந்த பவர்ப்ளேயர் முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தகுதியான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளியிலிருந்து கொண்டுவர முடியும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு அணி 11 வீரர்களுக்கு பதில், 15 வீரர்களை அறிவிக்க வேண்டும். போட்டியின் போது, கடைசிக் கட்டத்தில் முக்கியமான ரன் அடிக்க வேண்டிய இடத்தில், விளையாடும் 11 வீரர்களைத் தவிர்த்து, மீதமுள்ள 4 வீரர்களில் ஒருவரை தேர்வு செய்து களமிறக்க முடியும்.
இந்த 4 வீரர்களும், ஆட்டத்தின் போது களத்துக்கு வெளியே தான் இருப்பார்கள். அணி கேப்டன் தேவைப்படும் போது, ஒருவரை அழைத்துக் கொள்ளலாம்.
சிஎஸ்கே அணியை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். டாப் 11 வீரர்களில் முரளி விஜய் சேர்க்கப்படாமல், மீதமுள்ள நான்கு வீரர்களில் ஒருவராக உட்கார வைக்கப்படுகிறார். பேட்டிங் செய்து கொண்டிருக்கும் சிஎஸ்கே அணிக்கு, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் நிற்பது இரு பவுலர்கள் மட்டுமே. அப்போது முரளி விஜய்யை தோனி களமிறக்கிக் கொள்ளலாம்.
அதேபோன்று, சிஎஸ்கே பவுலிங் செய்தாலும், அந்த நான்கு வீரரில் ஒரு பவுலரை தோனி இக்கட்டான சூழலில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நோ-பால் அம்பயர்
இதுவும் ஒரு சுவாரஸ்ய முயற்சியாகும்.
கடந்த ஐபிஎல் தொடரில் நடுவர்கள் ஏகப்பட்ட நோ-பால்களை கவனிக்காமல் விட்டது, பெரும்பாலான அணிகளின் முடிவையே மாற்றியது. குறிப்பாக சிஎஸ்கே, ஆர்சிபி போன்ற அணிகள் அம்பயர்களின் தவறான முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதை கருத்தில் கொண்டு, நோ-பால்களைக் மட்டும் கவனிக்க தனித்த டிவி நடுவர் ஒருவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இவரது பணி, நோ பால்களை கண்காணிப்பது மட்டுமே. ஆனால், அவர் மூன்றாவது, நான்காவது அம்பயர் என்றெல்லாம் அழைக்கப்பட மாட்டார்.
பவர் பிளேயர் கூட ஜிம்மிக்ஸ் போன்று தெரிந்தாலும், இந்த நோ பால் அம்பயர் பரிசீலனை உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம் தான்.