IPL 2021 Cricket news in tamil: 14-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி வரும் 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
வரும் 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.தொடர்ந்து 10ம் தேதி நடக்கும் 2வது போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல் வரலாற்றிலே முதல் முறையாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற உள்ளது இந்த முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 14-வது சீசனில் தனது முதலாவது போட்டியை விளையாட தாயராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்தாண்டு நடக்கும் போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். கடந்த சீசனில் விளையாடிய ஹேசில்வுட், அணியில் தனக்கான ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.
இதற்கிடையில், சிஎஸ்கே அணியினருடன் தனது 48வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளெமிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், பயிற்சியாளர் ஃப்ளெமிங் கேக் கட் செய்கிறார். அப்போது அங்கிருந்த அணியினர் கைகளை தட்டியும், விசில் அடித்தும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பின்னர் அங்கிருக்கும் வீரர்களில் சிலர் ஃப்ளெமிங்கின் கண்ணத்தில் கேக்கை அப்புகின்றனர். பிறகு தனக்கு கேக் அப்பிய ரெய்னாவை அப்படியே காட்டித் தழுவி, ரெய்னா முகத்திலும் கேக்கை அப்புகிறார் ஃப்ளெமிங்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )