![IPL 2021 Tamil News: CSK’s new hurdle in resuming ipl](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-14T140109.062.jpg)
Chennai super kings Tamil News: இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் கொரோனா பெருந்தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் மீண்டும் தொடங்கப்படும் என இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-14T142421.960.jpg)
இந்த போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. தற்போது சில அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டி, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் மீண்டும் தொடங்கவுள்ள தொடருக்கான முதல் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-14T142551.897.jpg)
இந்திய மண்ணில் நடந்த தொடரின் முதல் பகுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவி இருந்தது. எனவே அமீரகத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ள முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என சென்னை அணி முனைப்பு காட்டும். ஆதலால், தொடக்க போட்டி முதலே சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.
இது ஒருபுறமிருக்க, மீண்டும் தொடக்கப்பட உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அந்த புதிய சிக்கல் என்னெவென்றால், சென்னை அணியின் முன்னணி வீரர்களாக உள்ள டுவைன் பிராவோ மற்றும் ஃபாஃப் டூப்ளசிஸ் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்று இருந்தனர். அப்போது ஏற்பட்ட காயத்தால் இந்த வீரர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-14T142912.858.jpg)
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள பிராவோ இதுவரை ஒரு ஓவர் கூட பந்து வீசாமல் வருத்தமளிக்கிறார். இதே போல கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் அசுரத்தனமான பேட்டிங் ஃபார்மில் இருந்த டூப்ளசிஸ் இன்னும் காயத்தில் திரும்பவில்லை. எனவே, இந்த இரு வீரர்களும் சில போட்டிகளில் களமிறக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-14T142934.472.jpg)
சென்னை அணிக்கு வந்துள்ள மற்றொரு சிக்கல் என்னெவென்றால், ஒருவேளை சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், சாம் கரண் மற்றும் மொயீன் அலி ஆகியோர் அணியில் இடம் பெறுவதில் சந்தேகம்தான். ஏனெனில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்காக ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது அவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது
ஜாம்பவான் வீரர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் வலுவான கம்பேக் கொடுத்திருந்தது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. எனினும் அந்த அணியின் முக்கிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் அந்த அணியை கேப்டன் தோனி எப்படி வழிநடத்துவார் என்பதில் கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.