IPL 2023 - BCCI - ‘Impact Player’ rule Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3வது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.
‘இம்பாக்ட் பிளேயர்’…. புதிய விதியை அறிமுகப்படுத்தும் பிசிசிஐ
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிய விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிசிசிஐ பிக் பாஷ் லீக்கில் உள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ என்ற விதியை ஐபிஎல் தொடரிலும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இம்பாக்ட் பிளேயர் என்ற கான்செப்டை பிசிசிஐ அறிமுகப்படுத்த விரும்புகிறது. அதில் பங்கேற்கும் அணிகள் டி20 போட்டியின் போது விளையாடும் லெவனில் ஒரு உறுப்பினரை ஆட்டத்தின் சூழலின் அடிப்படையில் மாற்றலாம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த விதியின்படி, ஒரு போட்டியின் போது அணிகள் தாங்கள் நினைத்தால், விளையாடும் லெவனில் உள்ள ஒரு வீரரை மாற்றலாம். அது அந்த அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் சையத் முஷ்டாக் அலி டிராபியில் (இந்தியாவின் உள்நாட்டு டி20 போட்டி) இந்த விதியை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த விதியை முதன் முதலாக யன்படுத்திய டெல்லி அணி 22 வயதான ஹிருத்திக் ஷோக்கீன் என்ற வீரரை களமிறக்கியது. அவர் 71 ரன்கள் வித்தியாசத்தில் தனது அணி வெல்ல உதவி இருந்தார்.
'இம்பாக்ட் பிளேயர்' விதியின் அம்சம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக்கில், டீம் ஷீட்டில் 12வது அல்லது 13வது வீரராக பெயரிடப்பட்ட 'எக்ஸ்-ஃபேக்டர் பிளேயர்', முதல் இன்னிங்ஸின் 10வது ஓவரைத் தாண்டி ஆட்டத்திற்குள் வரலாம் மற்றும் அவர் எந்தவொரு வீரருக்கும் மாற்று வீரராக களமிறங்கலாம். இதேபோல், ஒரு ஓவருக்கு மேல் வீசாத போது, தனது அணிக்காக அவர் ஃபீல்டிங் செய்யலாம். மேலும், அவர் மாற்றும் வீரர் பந்துவீசியிருந்தாலும் கூட, மாற்று வீரராக களமாடும் அவர் அதிகபட்சமாக நான்கு ஓவர்களை வீச முடியும்.
இம்பாக்ட் ப்ளேயரின் பயன்பாடு கட்டாயமில்லை. அதோடு, அணிகள் அதைப் பயன்படுத்த விரும்புகிறதா என்பதைப் பொறுத்தது. ஒரு இன்னிங்ஸின் 14வது ஓவர் முடிவதற்குள் எந்த நேரத்திலும் ஒரு இம்பாக்ட் பிளேயர் அறிமுகப்படுத்தப்படலாம்.
கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அணி மேலாளர் ஆகியோர் இம்பாக்ட் பிளேயரை அறிமுகப்படுத்துவது குறித்து களத்தில் உள்ள நடுவர்கள் அல்லது நான்காவது நடுவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
காயம் அடைந்த வீரர் அவருக்குப் பதிலாக ஒரு இம்பாக்ட் பிளேயரை அணி அறிமுகப்படுத்தினால், அவர் போட்டியில் பங்கேற்க முடியாது. இல்லையெனில், ஒரு ஓவர் முடிந்த பிறகுதான் இம்பாக்ட் பிளேயரை அறிமுகப்படுத்த முடியும். எவ்வாறாயினும், ஒரு இம்பாக்ட் பிளேயர் அணியால் பயன்படுத்தப்பட்டு, காயம் ஏற்பட்டால், அவர்கள் விளையாடும் சூழ்நிலையில் தற்போது செய்யும் அதே விதியே பொருந்தும்.
பேட்டிங் அணிக்கு, இம்பாக்ட் பிளேயர் விக்கெட் வீழ்ச்சியின் போது அல்லது இன்னிங்ஸ் இடைவேளையின் போது அறிமுகப்படுத்தப்படலாம். இது தொடர்பாக நான்காவது நடுவருக்கு அந்த அணி தெரிவிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil