IPL 2025 Today Qualifier 2 Match, PBKS vs MI Score Updates: ஐ.பி.எல் 18-வது சீசனில் குவாலிஃபைர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..
ஆங்கிலத்தில் படிக்க:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் க்வாலிஃபையர் 1 போட்டியில் சரிந்த பஞ்சாப் கிங்ஸ், தற்போது தங்களது நிலையை சரிசெய்யும் நோக்குடன், கம்பீரமாக பிளே ஆஃப்-ல் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வென்று மும்பை, இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றில் முதலிரண்டு இடங்களில் பஞ்சாப் கிங்ஸ் இருந்ததால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோல்வியடைந்தாலும், அவர்கள் இன்னொரு வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த சீசனில் தங்கள் முதல் சாம்பியன் பட்டத்தை நோக்கிச் செல்வதில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீதே முழு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கடந்த ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக்கிய ஐயர், தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப்போட்டியில் விளையாடும் முனைப்பில் இருந்தார்.
டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இரவு 7:30 மணிக்குத் தொடங்க வேண்டிய ஆட்டம் சுமார் 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கினாலும், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா (8) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (38) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய திலக் வர்மா பொறுப்புடன் ஆடினார். 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதத்தை நோக்கி முன்னேறி 44 ரன்கள் சேர்த்த நிலையில் நேஹால் வதேராவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில், நமன் திர் 7 பவுண்டரிகளுடன் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி தற்போது இலக்கை நோக்கி விளையாடியது.
இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்த விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 20 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்தார்.
5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ், ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து நேஹல் வதேரா - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஒன்று சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
அரைசதம் நோக்கி முன்னேறிய நேஹல் வதேரா(4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 48 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். சஷாங்க் சிங், 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதிவரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் (5 பவுண்டரி, 8 சிக்ஸர்) 87 ரன்கள் விளாசினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அஸ்வணி குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் ஐ.பி.எல். 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது.