14 வயதில் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபஸ் சூரியவன்ஷி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அதிரடியாக விளையாடி சதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
13 வயதில் ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்ற இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த, வைபவ் சூர்யவன்ஷி, சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோருக்கான 4 நாள் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் கடந்து இரண்டு மாதங்களுக்குள், ஐபிஎல் 2025 ஏலத்தில் இடம் பிடித்த வைபவ் சூரியவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பீகாரைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான இவர், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார், இதன் மூலம் ரஞ்சி டிராபியில் இடம்பெற்ற இரண்டாவது இளைய வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி, அந்தப் போட்டியில் அவர் சிறப்பான தொடக்கத்தைப் பெறவில்லை, ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான சதம் கடந்து தன்னை நிரூபித்தார்.
அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த யு19 ஆசியக் கோப்பை தொடரில், இரண்டு அரைசதங்கள் மூலம் இளைஞர் கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரியவராகக் மாறிய வைபவ் சூரியவன்ஷி, நாக்பூரில் நடந்த சோதனைகளின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தையும் தனது ஆட்டத்தின் மூலம் கவர்ந்து இழுத்தார். இறுதியில் அவர்கள் ஏல அட்டவணையில் டெல்லி கேபிடல்ஸை விட 1.1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தனர்.
ஐபிஎல் தொடரில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி, லக்னோ அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்கிய வைபவ் சூரியவன்ஷி, அறிமுக போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டி அசத்தினார். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், 20 பந்துகளில், 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்களில் தோல்வியை சந்தித்தது. அடுத்து, இந்த பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து இன்று (ஏப்ரல் 28) நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், 38 பந்துகளை சந்தித்த அவர், 7 பவுண்டரி 11 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இளம் வயதில் (14 வயது 32 நாட்கள்) டி20 போட்டிகளில் சதம் கடந்த சர்வதேச அளவில் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஐபிஎல் தொடரில் மிக குறைந்த பற்துகளில் (35) சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 2013-ம் ஆண்டு கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும் சதம் கடந்த வைபவ் சூரியவன்ஷிக்கு, எதிரானி வீரர்கள், கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அரங்கமே எழுந்து நின்று அவருக்கு வாழத்துக்களை கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.