![IPL Auction Tamil News: windfall stories of Dewald Brevis, Abhishek sharma, Harpreet Brar](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-13T150804.873.jpg)
பேபி ஏபி
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் (யு-19) கலக்கிய தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டெவால்ட் ப்ரீவிஸ், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ 3 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் தென்ஆப்பிரிக்க முன்னணி வீரர் ஏபி டி வில்லியர்ஸைப் போலவே அதே பாங்குடன் விளையாடுவதால் இவரை பேபி ஏபி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-13T152320.826.jpg)
ப்ரீவிஸ் தனது சிறுவயது ஹீரோவைப் போலவே, லேப் ஷாட், ஸ்கூப், சுவிட்ச் ஹிட், ராம்ப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆகிய ஷாட்களை மிகச் சரியாக கையாள்கிறார். சமீபத்தில் நடந்த யு-19 உலகக் கோப்பையில் 18 சிக்ஸர்களுடன் 506 ரன்கள் குவித்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையைப் படைத்தார்.
டி வில்லியர்ஸ் தனது ஹீரோவாக இருப்பதால், ப்ரீவிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியில் சேர ஆர்வமாக இருந்தார். ஆனால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-13T152332.602.jpg)
ப்ரீவிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் "ஏபி மற்றும் விராட் அங்கு விளையாடுவதால் எனது சப்போர்ட் ஆர்சி அணிக்கு தான். எங்கள் வீட்டில், ஐபிஎல் தொடர் என்பது ஒரு பெரிய விஷயம்; நாங்கள் எந்த விளையாட்டுகளையும் தவறவிடுவதில்லை. அண்ணனுக்கும் எனக்கும்தான் பெரிய மோதல் வரும்; அவர் எம்எஸ் தோனியின் மிகப்பெரிய ரசிகர் மற்றும் சிஎஸ்கேவின் சப்போர்ட்டர்." என்று கூறியுள்ளார்.
யு-19 உலக்கோப்பையில் நட்சத்திர வீரர் இப்போது ஐபிஎல்லில் தொடக்க வீரர்!
நேற்று நடந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 6.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் கடந்த சீசன்களில் அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். இவரது தந்தை ராஜ் குமார் ஷர்மா முன்னாள் இந்திய U-19 கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது அமிர்தசரஸில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிகிறார்.
அபிஷேக் ஷர்மா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயிற்சி மேற்கொண்டவர். அந்நாட்டு தேசிய அணிக்காகவும் அவர் விளையாடி இருக்கிறார். 21 வயதான இவரை நேற்று ஏலத்தில் வாங்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ஏலம் கேட்க ஆரம்பித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே அவரை லாபகமாக வசப்படுத்தியது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-13T152344.119.jpg)
அபிஷேக் சர்மா 2018ம் ஆண்டு ஆசியக் கோப்பையை வென்ற இந்திய U-19 அணியின் கேப்டனாகவும் இருந்தவர். 2018 U-19 உலகக் கோப்பையில் தனது ஆல்ரவுண்ட் செயல்திறன் மூலம் பலரையும் ஈர்த்த அவரை ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் 2018ம் ஆண்டு ரூ.55 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது. இதன்பின்னர், அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேடு செய்யப்பட்டார்.
கடந்த சீசனில் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் நீக்கப்பட்ட பிறகு, அவர் இடத்தில் பேட்டிங் செய்ய இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது சுழலில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த சீசனில் பஞ்சாப் ரஞ்சி அணியை அபிஷேக் வழிநடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலையான முன்னேற்றம்
பஞ்சாப் காவல்துறையின் முன்னாள் தலைமை கான்ஸ்டபிள் மொஹிந்தர் சிங்கின் மகன் ஹர்ப்ரீத் ப்ரார், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஏலப் போருக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸால் ரூ. 3.80 கோடிக்கு வாங்கப்பட்டார்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-13T152350.215.jpg)
கடந்த சீசனில், ஹர்ப்ரீத் ப்ரார் பஞ்சாப் அணிக்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால், நேற்று நடந்த ஏலத்தில் அவரை அந்த அணி திருப்ப எடுக்க போட்டி போட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான ஏலத்திற்கு முன்பு இவர் அந்த அணியிடம் மூன்று முறை ட்ரைல்ஸ் கொடுத்திருந்தார். பின்னர் தான் அவரை அந்த அணி ஏலத்தில் ரூ 20 லட்சத்திற்கு எடுத்தது. அவர் 2019ல் இரண்டு போட்டிகளிலும், 2020ல் ஒரு போட்டியிலும் விளையாடி இருந்தார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ப்ரார் 2021ம் ஆண்டில் நடத்த தொடரில் விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது இவர் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இந்திய அணிக்கான நெட் பவுலராக செயல்பட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.