MS Dhoni and Dwayne Bravo tamil news: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 156 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த சிறப்பான வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்திற்கு பிறகான பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அப்போது அவர் இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய முன்னணி வீரர் பிராவோ தனக்கு சகோதரர் போன்றவர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

“பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சமயம் மொயீனிடம் பந்துவீசச்சொன்னேன். ஆனால், பிறகு மனதை மாற்றி பந்தை பிராவோவிடம் கொடுத்தேன். அவர் கடினமான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அதே போலவே அவர் விக்கெட்டை வீழ்த்தினார்.

பிராவோ மெதுவாக பந்து வீசி விக்கெட் எடுக்கக்கூடியவர். அவரது மெதுவான பந்துவீச்சு பல பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். அதனால் நான் அவரிடம் ஆறு பந்துகளையும் பல விதமாக வீசுமாறு கூறுவேன். இதில் எனக்கும் பிராவோவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். அவரை நான் எப்போதும் சகோதரராகவே அழைப்பேன். அவர் எனக்கு எப்போதும் சகோதரர் போன்றவர். அவருக்கும் எனக்கு இடையே உள்ள நட்பு மிகவும் சிறப்பான ஒன்று” என சென்னை அணியின் கேப்டன் தோனி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil