CSK pacer Deepak Chahar sustained a hamstring injury in the game against Mumbai Indians Tamil News
CSK Deepak Chahar to undergo scans, IPL 2023 Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பயிற்சியின் போது ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு கால் விரலில் சிறு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டுவைன் பிரிட்டோரியஸ் விளையாடினார்.
Advertisment
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் விளையாடிய போது, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு தான், காயத்தின் அளவு தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவ ஊழியர்கள் இரு வீரர்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் குணமடைய தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்" என்று சென்னை அணி அதன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பின்னடைவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு பதில் களமாட டுவைன் பிரிட்டோரியஸ் ரஹானே போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இடத்தில் விளையாட அனுபவம் வாய்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லை. இது அணியின் வேகப்பந்துவீச்சு வரிசையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீசனில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களில் சென்னை அணியின் பேட்டிங் அசத்தலாக உள்ளது. பேட்டிங் வரிசையும் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு மொயீன் அலி, ஷிவம் துபே, கேப்டன் எம்.எஸ் தோனி போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களால் வலுவாக உள்ளது. சுழற்பந்து வீச்சு வரிசையில் மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் போன்ற வீரர்கள் சிறப்பாக பந்துகளை வீசியுள்ளனர். இந்த வீரர்கள் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை முடித்த கையுடன் திரும்பியுள்ள மகேஷ் தீக்ஷனா அணியில் இணைந்துள்ளார். அவரின் வருகை மேலும் பலம் சேர்க்கிறது.
ஆனால், வேகப்பந்து வீச்சு வரிசை தான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் கொடுக்கும் வீரர்களை கொண்டதாக உள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் துஷார் தேஷ்பாண்டே, சிசண்டா மகலா, டுவைன் பிரிட்டோரியஸ் போன்ற அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆரம்ப ஓவர்களில் துஷார் தேஷ்பாண்டே முந்தைய போட்டியை விட கம்பேக் கொடுத்தாலும், அவர் கடைசியாக வீசிய ஓவர்களை ரன்களை வாரி வழங்கினார். எனினும், கேப்டன் தோனியின் அறிவுரையில் அவர் இன்னும் சிறப்பாக வீசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மாற்று வீரர்
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தால் அவதியுற்று வரும் நிலையில், அவருக்கு மாற்று வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே, சிசண்டா மகலா, டுவைன் பிரிட்டோரியஸ் போன்ற வீரர்களைத் தவிர, ஆகாஷ் சிங், ஆர்எஸ் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங் போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வீரர்களில் ஹங்கர்கேகர் மட்டுமே 3 போட்டிகளில் 2ல் விளையாடிய அனுபவம் கொண்டவராக இருக்கிறார். அவரைத் தவிர சிமர்ஜீத் சிங் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்ட வீரராக உள்ளார். குறைந்த எக்கனாமியில் சிறப்பாக பந்துவீசுபவராகவும் அறியப்படுகிறார். இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வைத்து சந்திக்கிறது. இப்போட்டியானது வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 12ம் தேதி) நடக்கிறது. சொந்த மைதானத்தில் நடப்பதால் சென்னை அணி அதன் ஆதிக்கத்தை தொடரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil