IPL 2023, Chennai Super Kings vs Gujarat Titans, JioCinema Tamil News: 16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. இரவு 7:30 மணிக்கு அரங்கேறிய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் 92 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விருதிமென் சஹா 25 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 63 ரன்கள் குவித்தார். இறுதியில், 19.2 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான தொடக்கப் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான வயாகாம்18 நேரலையில் ஒளிபரப்புவதில் பெரும் சிக்கலை சந்தித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகார் எழுப்பி வருகின்றனர்.
வயாகாம்18 -இன் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா, போட்டியின் டிஜிட்டல் உரிமையை கடந்த ஆண்டு 23,758 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த உரிமம் 2023 முதல் 2027ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது. டிஸ்னி ஸ்டார் மற்றும் வயாகாம்18 இடையே நடந்த ஏல போரில் வயாகாம்18 உரிமத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில், நேற்றைய தொடக்க ஆட்டத்தை ஒளிபரப்பு செய்த ஜியோ சினிமா பஃபரிங் பிரச்சனையை எதிர்கொண்டதால் ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், போட்டி தொடங்கிய சில நிமிடங்களில், #JioCrash உடனான ட்வீட்கள் வெளிவரத் தொடங்கின. #JioCrash என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கிலும் இருந்தது. ஜியோ சினிமாவை டேக் செய்யும் போது ட்விட்டர் பயனர் ஒருவர், "உங்கள் செயலியில் இது மிகவும் மோசமான அனுபவம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil