Ravindra Jadeja Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் விளையாடி வரும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த 12 ஆட்டங்களில் 8ல் தோல்வி 4ல் வெற்றி என 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. நேற்று மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியுற்றதன் மூலம் தொடரில் இருந்து சென்னை அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் வீரர் ரவிந்திர ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், அவரது தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்வி கண்டு பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் (10 போட்டியில் 116 ரன், 5 விக்கெட்) கூடுதல் கவனம் செலுத்த நினைத்த ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து தானாகவே விலகினார். எனவே சென்னை அணியை வழிநடத்தும் பொறுப்பு மீண்டும் முன்னாள் கேப்டன் தோனியிடமே வழங்கப்பட்டது.

இதன்பிறகு தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் சாதாரண வீரராக களமாடிய ஜடேஜாவுக்கு பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்போது காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை அணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை எனவும் மருத்துவ அறிவுரையின்படி அவர் ஓய்வு எடுக்க இருப்பதால் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
📢 Official Announcement:
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2022
Jadeja will be missing the rest of the IPL due to injury. Wishing our Jaadugar a speedy recovery! @imjadeja
இந்நிலையில் தற்போது ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மோதலை உறுதிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவிர, ஜடேஜா – சென்னை அணி நிர்வாகம் இடையில் பெரும் பிரச்சினை இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.
ஜடேஜா குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ஜடேஜா எங்கும் கேப்டனாக இருக்கவில்லை. அவர் தண்ணீரில் இருந்து வெளியேற்றப்பட்ட மீனாகத் தான் தோன்றினார். தோனி மைதானத்தில் இருக்கும் வரை அவர் எங்கு தவறு செய்கிறார் என்பதைக் கணக்கிடுவது கடினம்.” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil