ஸ்கெட்ச் போட்ட ராகுல், மார்க் வுட்… ஆனாலும் அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்: திகட்டாத தோனி வீடியோ
லக்னோ கேப்டன் கேஎல் ராகுலும் தானும் திட்டமிட்ட இடத்தில் தான் பந்துவீசியதாகவும், ஆனாலும் தோனி அதை சிறப்பாக விளையாடி சிக்ஸர் அடித்தார் என்றும் மார்க் வுட் கூறியுள்ளார்.
Mark Wood recalls MS Dhoni's 'incredible' sixes Tamil News
Mark Wood, MS Dhoni IPL 2023 Tamil News: 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடி வருபவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட். இவர் 2018 ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸால் 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. எனினும், அவருக்கு போட்டிகளில் களமாட பெரியதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடந்த 2022 ஏலத்தில் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் வாங்கப்பட்டார். இருப்பினும், முழங்கை காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
Advertisment
இந்த நிலையில், நடப்பு சீசனில் மார்க் வுட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பந்துகளை வீசி வருகிறார். அவர் டெல்லி அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். தொடர்ந்து, சென்னைக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்களான டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அமைத்த சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அடைத்தார் மார்க் வுட். அதன்பிறகு, ஆல்ரவுண்டர் வீரரான ஜடேஜாவின் விக்கெட்டையும் எடுத்தார். ஆனால், அடுத்த வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி வுட் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இது வுட் மீது இருந்த அழுத்தத்தை எகிற செய்தது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு வந்த அவர் தோனிக்கு வீசிய 3வது பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
Advertisment
Advertisements
அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பகுதியில் வீசப்பட்ட அந்த பந்து ஷார்ட் டெலிவரி ஆகும். தோனி அதை தனது வலிமையான மணிக்கட்டைப் பயன்படுத்தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பறக்க விட முயன்ற போது, ரவி பிஷ்னோய் வசம் கேட்ச் ஆனது. போட்டிக்குப் பிறகு பேசிய மார்க் வுட், லக்னோ கேப்டன் கேஎல் ராகுலும் தானும் திட்டமிட்ட இடத்தில் தான் பந்துவீசியதாகவும், ஆனாலும் தோனி அதை சிறப்பாக விளையாடினர் என்றும் தெரிவித்தார்.
"நானும் கே.எல் ராகுலும் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்து, அவரை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்தோம். என் மனதில், நான் டிஃபென்ஸ் செய்ய முயற்சிக்கவில்லை. உண்மையில் அவர் ரன்களை எடுப்பதையும் பெறுவதையும் தடுக்கும் வழிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். துரதிருஷ்டவசமாக, எனக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், குறிப்பாக அந்த இரண்டாவது ஷாட் ஒரு அற்புதமான ஷாட். பின்னர், நானும் ராகுலும் முடிவு செய்த இடத்தில் சரியாகப் பந்து வீசினேன். ஒரு பவுன்சரை ஒயிடாக வீச முடிவு செய்தோம். அவர் அடிக்க முடிந்தால் அடிக்கட்டும் என்று நினைத்தோம். ஆனால், அவர் அதை அடித்தது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது.
அவர் பேட்டிங் செய்ய வெளியே வந்ததும், அந்த இரண்டு பந்துகளையும் அடிக்கும் போதும் எழுப்பப்பட்ட ரசிகர்களின் சத்தம், நிச்சயமாக நான் இதற்கு முன் எப்போதும் விளையாடி போது எழுப்பப்பட்ட சத்தத்தை விட அதிகமாக இருந்தது. என் கண்களைத் திறப்பதாக இருந்தது. ஆனால் திரும்பிப் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது," என்று தோனியின் கேப்டன்சியின் கீழ் ஐபிஎல் 2018ல் சென்னை அணிக்காக அறிமுகமான மார்க் வுட் கூறினார்.