MS Dhoni of Chennai Super Kings takes the catch to dismiss Ayush Badoni of Lucknow Super Giants during the Indian Premier League cricket match between the Chennai Super Kings and the Lucknow Super Giants in Chennai, India, Monday, April 3, 2023. (AP Photo/ R. Parthibhan)
Chennai Super Kings vs Lucknow, MS Dhoni Tamil News: 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.
Advertisment
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக ரன்களை சேர்த்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், டெவோன் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வூட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி பவர் பிளேயில் சென்னையின் பந்துவீச்சை தும்சம் செய்தது. குறிப்பாக, தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி திணறடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அவருக்குப்பின் களம் புகுந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சாளர்களின் அடித்து ஆடி விளையாடினர். எனினும், மொயீன் அலியின் அசாத்திய சுழல் லக்னோவுக்கு பின்னடைவை கொடுத்தது.
இறுதியில். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தொடரில் தனது முதல் வெற்றியையும் பதிவு செய்தது. சென்னை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நோ-பால், ஒயிடு-க்கு பஞ்சமில்லை
இந்த ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோவுக்கு பந்துவீசிய சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் 3 நோ பால்கள் மற்றும் 13 ஒயிடுகள் வீசினர். குறிப்பாக, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே ஒயிடு, நோ-பால் என மாறி மாறி போட்டு 11 பந்துகள் வீசி 18 ரன்களை வாரிக்கொடுத்தார். இதேபோல், 19 ஓவரை வீசிய ஹங்கர்கேகர் ஒரு நல்ல பந்து வீசினால் அடுத்த பந்து ஒயிடு வீசி ரசிகர்களுக்கு கடுப்பேற்றினார்.
துஷார் தேஷ்பாண்டே
தொடக்கம் முதலே பந்துவீச்சில் சொதப்பி வந்த அவர்கள் இறுதிக்கட்டத்தில் அணியின் வெற்றியை உறுதி செய்யும் ஓவரிலும் சொதப்பி எடுத்தனர். இது ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. ஆனால், கீப்பராக இருந்த கேப்டன் தோனி முகம் சுளிக்காமல், வழக்கம் போல் 'கூல்' கேப்டனாக இருந்தார்.
எச்சரிக்கை
இருப்பினும், போட்டிக்கு பிந்தைய பேட்டியில் பேசிய அவர் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து கேப்டன் தோனி பேசுகையில், "அணியில் வேகப்பந்துவீச்சை சற்று மேம்படுத்த வேண்டும். சூழல்களுக்கு ஏற்ப அவர்கள் பந்து வீச வேண்டும். எதிரணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உண்ணிப்பாக கவனிப்பது முக்கியம். இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் நோ-பால் அல்லது கூடுதல் ஒயிடுகளை வீசக் கூடாது. அப்படி தொடர்ந்து வீசும் பட்சத்தில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இது எனது இரண்டாவது எச்சரிக்கை. இதற்குப் பிறகு நான் வெளியேறி விடுவேன். ஆடுகளம் சிறப்பாக இருந்ததால் மட்டுமே எங்களால் இந்த அளவிற்கு ரன்களை எடுக்க முடிந்தது"என்று அவர் கூறினார்.