புரோ ஆக்கி லீக் போட்டி: இந்திய மகளிர் அணியில் மீண்டும் ராணி ராம்பால்
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ மகளிர் ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி தனது அடுத்த இரண்டு லீக் ஆட்டங்களில் ‘நம்பர் ஒன்’ அணியான நெதர்லாந்தை வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் எதிர்கொள்கிறது.
இந்தியா-நெதர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக ஒதுங்கி இருந்த ராணி ராம்பால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குள் நுழைந்துள்ள அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.
கோல்கீப்பர் சவிதா கேப்டனாகவும், தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் தொடருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 இல் ஆஸ்திரேலியா வெற்றி-கேப்டன் அரை சதம்
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 46 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டி20 தொடரை கைப்பற்றியது.
RR vs RCB Highlights: ஷாபாஸ் – தினேஷ் அதிரடி; ராஜஸ்தானை வெளுத்து வாங்கிய பெங்களூருவுக்கு அபார வெற்றி!
முதல் வெற்றி பெறுமா மும்பை
இன்று மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் நைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை ஒரே ஒரு வெற்றி கூட பெற முடியாமல் மும்பை தவித்து வருகிறது.
இதுவரை 5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் ஆன ஒரு அணி, ஒரு வெற்றியைக் கூட இந்த சீசனில் பெற முடியாமல் இருப்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2இல் வெற்றி பெற்றுள்ளது.
புணே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறவுள்ளது.
டேபிள் டென்னிஸ்: 4ஆவது இடத்தில் இந்திய இணை
உலக டேபிள் டென்னிஸில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டது.
இதில், மகளிர் இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா-அர்ச்சனா காமத் இணை, இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆவது இடத்தைப் பிடித்தது.
சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதை அடுத்து, இந்த இணை தரவரிசையில் முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil