9-வது டி.என்.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று செவ்வாய்கிழமை (ஜூன்-5) முதல் தொடங்கி நடக்கிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த வாரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஜூலை 6 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்நிலையில், நடப்பு தொடரில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் கோவை கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில், டி.என்.பி.எல். தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் - சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பவுலிங் - திருப்பூர் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங் ஆடியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா களமிறங்கிய நிலையில், அமித் சாத்விக் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த ராஜ்குமார் 14 ரன்னுக்கு அவுட் ஆனார்.
களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த தொடக்க வீரர் துஷார் ரஹேஜா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த உத்திரசாமி சசிதேவ் 7 ரன்னுக்கு அவுட் ஆனார். 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசிய பிரதோஷ் ரஞ்சன் பால் 38 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறவே, 20 ஓவர்கள் முடிவில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பவுலிங் போட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபிஷேக் தன்வார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். பிரேம் குமார், லோகேஷ் ராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சேப்பாக்கம் பேட்டிங்
தொடர்ந்து 174 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்களாக கே ஆஷிக் - ஆர்.எஸ் மோகித் ஹரிஹரன் ஜோடி களமிறங்கினர். இதில் அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுக்க நினைத்த ஆஷிக் 4 ரன்னில் அவுட் ஆனார். இதன்பிறகு களம் புகுந்த பாபா அபராஜித் உடன் ஜோடி அமைத்தார் ஆர்.எஸ் மோகித் ஹரிஹரன். இந்த ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர்.
22 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்க விட்ட ஆர்.எஸ் மோகித் ஹரிஹரன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர், களத்தில் பாபா அபராஜித் - விஜய் சங்கர் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணி வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க உதவினர். அரைசதம் விளாசி அசத்திய பாபா அபராஜித் 48 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். இதேபோல், விஜய் சங்கர் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்தார்.
அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட பாபா அபராஜித் அணியின் வெற்றியை உறுதி செய்த நிலையில், 16 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபராஜித் (கேப்டன்), அபிஷேக் தன்வார், எஸ் தினேஷ் ராஜ், கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன், லோகேஷ் ராஜ்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழர்கள்: அமித் சாத்விக், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), உத்திரசாமி சசிதேவ், கே ராஜ்குமார், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், பிரபஞ்சன் எஸ், எம் மதிவண்ணன், ஆர் சிலம்பரசன், டி நடராஜன்.