புரோ கபடி லீக் தொடரின் 12-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பி.கே.எல் வரலாற்றில் முதல்முறையாக, 10 வீரர்கள் ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டனர். ஈரான் வீரர் முகமது ரேசாவை ரூ. 2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. இதன் மூலம், புரோ கபடி லீக் ஏல வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ரூ. 2 கோடிக்கு மேல் ஏலம் போன வீரர் என்கிற பெருமை அவர் பெற்றார்.
ராணுவ வீரரை வளைத்துப் போட்ட குஜராத்
இந்நிலையில், ஜம்முவுக்கு அருகிலுள்ள பவுனிசக் கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரரான லக்கி சர்மாவை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அவரை ரூ.19.50 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. இந்திய ராணுவ வீரரான லக்கி, உள்ளூர் போட்டிகளில் இருந்து தேசிய அளவிலான கபடி போட்டிகளில் ஆட தொடர்ந்து முயற்சி வருகிறார்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸுடன் தனது முதல் மூன்று பி.கே.எல் சீசன்களை விளையாடிய பிறகு, லக்கி கடந்த சீசனில் ரூ.13 லட்சம் ஒப்பந்தத்தில் வாங்கப்பட்டார். அவரது விதிவிலக்கான தற்காப்புத் திறன்கள் இப்போது பல அணிகளை ஈர்த்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு குஜராத் ஜெயண்ட்ஸ் அவரை வசப்படுத்தியுள்ளது.
அவரது ராணுவ அர்ப்பணிப்புகள் இருந்தபோதிலும், இந்திய தேசிய கபடி அணியில் இடம் பெற லக்கி தனது கடுமையான பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார். அவர் தனது வெற்றியை ஜம்மு மற்றும் காஷ்மீர் கபடி பயிற்சியாளர்களான அஜய் சர்மா, சஞ்சய் மற்றும் குல்தீப் குப்தா ஆகியோருக்கு அர்பணித்துள்ளார்.
தனது 10 வயதில் கபடி விளையாட தொடங்கிய லக்கி, பல ஜூனியர் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் ஜம்மு மற்றும் காஷ்மீரைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். "இந்த சீசனில் வலுவாக செயல்பட்டு தேசிய அணியில் இடம் பெறுவதே எனது குறிக்கோள். ஜம்மு மற்றும் காஷ்மீருக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன்," என்று லக்கி கூறியுள்ளார். ஈரானிய நட்சத்திரம் முகமதுரேசா ஷாட்லோ மற்றும் அவரது சொந்த பயிற்சியாளர் அஜய் சர்மா ஆகியோர் தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.