இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடிய இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 56 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய வங்கதேசம் 149 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/1f660d177fc21671664564a2d6297c8436ceb299ceaccfae54dbe1c24f7ae97b.jpg)
இந்நிலையில், இந்தப் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அவர் வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத்-தின் விக்கெட்டை 3வது விக்கெட்டாக வீழ்த்தியதன் மூலம், தனது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 400 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 162 விக்கெட்டுகளும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளும், டி20-யில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்த 400 விக்கெட்டுகள் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், பும்ரா 400 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், இந்த சாதனையை படைத்த 6வது வேகப்பந்துவீச்சாளார் என்கிற சாதனையும் படைத்துள்ளார். அவரது இந்த அசத்தலான சாதனையை பாராட்டி ரசிகர்கள் பும்ராவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“