Bcci Tamil News: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தற்போதைய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் வாரியத்தின் விதிகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை ஏற்றுக்கொண்டது. அதன்படி, பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிற நிர்வாகிகள் தங்களது பதவிகளில் மேலும் 3 ஆண்டுகள் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிசிசிஐ விரைவில் அதன் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை அழைக்க உள்ளது. மேலும், வாரியத்தின் அரசியலமைப்பை திருத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்த பிறகு புதிய தேர்தல்களுக்கு மாநில சங்கங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும். தற்போதைய பிசிசிஐ நிர்வாகிகள் தங்களது மூன்றாண்டு பதவிக் காலத்தை செப்டம்பரில் முடிப்பார்கள். அதன்பிறகு புதிய தேர்தல் நடத்தப்படும்.
இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நாட்டில் உள்ள 15 மாநில சங்கங்களுடன் பேசியது. அவர்கள் அனைவரும் பிசிசிஐயின் தற்போதைய செயலாளரான ஜெய் ஷாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவரின் முயற்சியால் மட்டுமே கொரோனா தொற்றுநோய்களின் போது இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற முடியும் என்று பல உறுப்பினர்கள் கருதினர் என்றும், ஐபிஎல் ஊடக உரிமை ரூ. 48,390 கோடியை ஈட்டியது என்றும் கூறியுள்ளார்.
"ஜெய் ஷா இந்திய வாரியத்தின் பொறுப்பை ஏற்கும் நேரம் வந்துவிட்டது. மேலும் அனைத்து சங்கங்களும் அவரை ஆதரிக்க தயாராக உள்ளன" என்று ஒரு மாநில சங்கத்தின் முக்கிய உறுப்பினர் கூறியுள்ளார்.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசிசிஐ அரசியலமைப்பின் படி, மாநில சங்கத்திலோ அல்லது பிசிசிஐயிலோ தொடர்ந்து பதவி வகித்தவர்கள் மூன்று ஆண்டுகள் 'கூலிங்-ஆஃப் பீரியட்' காலத்தை நிறைவு செய்தபின்தான் சங்கத்தின் பிற தேர்தல்களில் போட்டியிட முடியும்.
தற்போது அந்தச் சட்டம் மாற்றப்பட்டு ஒரு தனிநபர் மாநில சங்கத்தில் இரண்டு முறை, தலா மூன்று ஆண்டுகள் பணியாற்றலாம். அதன்பின்னர் கூலிங்-ஆஃப் பீரியட் காலத்திற்குச் செல்வதற்கு முன் இரண்டு முறை பிசிசிஐ உறுப்பினராக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 2019ல் பொறுப்பேற்ற கங்குலி மற்றும் ஜெ ஷா 2025 ஆம் ஆண்டு வரை பிசிசிஐ பொறுப்பில் நீடிக்க வழிவகை செய்துள்ளது. ஏற்கனவே, பிசிசிஐயின் உயர் பதவிக்கு 15 மாநில சங்கங்கள் ஜெய் ஷாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 33 வயதான ஜெய் ஷா, பிசிசிஐ-யின் இளம் தலைவர் ஆவதற்கு தயாராகி வருகிறார் என்பதில் ஐயமில்லை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil