காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் தங்கம் வென்று அசத்தினார். இதனால், பதக்க பட்டியலில் இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேறியது.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியா தனது எட்டாவது தங்கத்தை கைப்பற்றியது. இதே, 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மேலும், இன்று நடந்த ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 31 தங்கம் வென்றுள்ள ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.