ஒரு கிரிக்கெட் போட்டியில் மழைச்சாரல் போல சிக்சர்ஸ் அடிச்சு பார்த்து இருப்பீங்க. அடை மழையாக சிக்சர்ஸ் அடிச்சு பார்த்து இருப்பீங்க... பேய் மழையாக, காட்டடி மழையாக சிக்சர்ஸ் அடிக்கப்பட்டு பார்த்து இருக்கீங்களா?
வெஸ்ட் இண்டீஸின் செயின்ட் ஜார்ஜியாவில் நேற்று(பிப்.27) நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் தான் இந்த மெகா மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாகப்பட்டது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களை குவித்தது. இதில், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களை விளாசினார். ஸ்டிரைக் ரேட் 194.81. இதில் 13 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும். தவிர, கேப்டன் மோர்கன் 103 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 82 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர் க்றிஸ் கெயில் 97 பந்துகளில் 162 ரன்களை விளாசித் தள்ளினர். இதில் 11 பவுண்டரிகளும், 14 சிக்ஸர்களும் அடங்கும். டேரன் பிராவோ 61 ரன்களும், பிரத்வெயிட் 50 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், மற்ற வீரர்களின் பங்கு சிறப்பாக இல்லாததால், 48 ஓவர்களில் 389 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் மொத்தமாக 807 ரன்கள் அடிக்கப்பட்டன. மொத்தமாக 46 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவேயாகும்.
தவிர, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களுக்கும் மேல் அடித்தது இது ஐந்தாவது முறையாகும். 'தி கிரேட்' கிறிஸ் கெயில் 51 பந்துகளில் சதம் அடித்து, தனது அதிவேக ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். தவிர, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களையும் கடந்தார்.
40 வயதான க்றிஸ் கெயிலின் பேட் இன்னமும் தனது ஆவேசத்தை கொஞ்சம் கூட நிறுத்தவில்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.