உலககோப்பை சர்க்கிள் கபடி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரப்பூர்வ இந்திய அணி வீரர்கள் அல்ல என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலககோப்பை சர்க்கிள் கபடி தொடர், பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், இந்திய அணி (??), பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், 43-41 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சர்க்கிள் கபடி போட்டி என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் கபடி போட்டியில், 7 வீரர்கள் விளையாடுவர், வீரர்கள் 80 கிலோவிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சர்க்கிள் கபடி போட்டியில், 8 வீரர்கள் பங்கேற்பர், இவர்களுக்கு உடல் எடை குறித்த எவ்வித நிபந்தனையும் இல்லை
இந்தியா சாம்பியன் : 2016ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கபடி தொடரில், ஈரான் அணியை வீழத்தி, இந்தியா நடப்பு சாம்பியனாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அணி அல்ல - இந்தியா விளக்கம் : பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில் பங்கேற்ற வீரர்கள் அதிகாரப்பூர்வ இந்திய அணியின் வீரர்கள் அல்ல என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச கபடி கூட்டமைப்பு (International Kabaddi Federation (IKF)), ஸ்டாண்டர்டு வகையிலான கபடி தொடர்களை மட்டுமே நடத்தி வருகிறது.
இந்திய கபடி நிர்வாக கழகம் (India’s kabaddi governing body (AKFI)), மற்றும் இந்திய ஒலிம்பிக் அமைப்பு Indian Olympic Association (IOA)) உள்ளிட்ட அமைப்புகள் எதுவுமே, பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில், இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை.
இந்திய அணி, இந்தியாவை தவிர்த்து, மற்ற நாடுகளுக்கு சென்று விளையாட வேண்டுமென்றால், விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியையும், குறிப்பிட்ட அந்த அமைச்சகம் வழங்கவில்லை.
இந்த தொடரில், இந்திய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரெண் ரெஜிஜூ தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கபடி கழகம் (Punjab Kabaddi Association (PKA)) விளக்கம்
பாகிஸ்தானில் நடைபெற்ற சர்க்கிள் கபடி தொடரில் பங்கேற்ற அணியில், பஞ்சாப் வீரர்களே அதிகம் இடம்பெற்றிருந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் கோரப்பட்டது. பஞ்சாப் கபடி கழகம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்க்கிள் வகை கபடி போட்டிகள், பஞ்சாபில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, உலககோப்பை சர்க்கிள் கபடி தொடர் நடைபெற உள்ளது. பங்கேற்குமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்தே தாங்கள் பங்கேற்றதாக பஞ்சாப் பாகிஸ்தான் கழகம் தெரிவித்துள்ளது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் பங்கேற்றதாக அது மேலும் தெரிவித்துள்ளது.