Kamran Akmal lashes out at PCB selectors Should I go and perform in India - 'நான் இந்தியாவுக்கு சென்று விளையாடினால் என்னை பரிசீலிப்பார்களா?' - பாக்., வீரர் கம்ரான் அக்மல் வேதனை
பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் புலம்பிய புலம்பல் தான் இது.
Advertisment
கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஃபார்மில் இல்லாத கம்ரான் அக்மல் தொடர்ந்து அணியில் இருந்து சேர்க்கப்படாமல் இருந்தார். அவரது இன்கன்சிஸ்டன்ஸி பேட்டிங்கும் தொடர, கடந்த ஐந்து வருடங்களாக எந்தத் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால், பாகிஸ்தானின் முதல்தர கிரிக்கெட் தொடரான Quaid-e-Azam டிராபி தொடரில் அட்டகாசமான ஃபார்மை கம்ரான் அக்மல் வெளிப்படுத்தினார். இத்தொடரில் 3 சதம், நிறைய அரைசதம் என்று விளாசிய கம்ரான் அக்மல் மொத்தமாக 906 ரன்கள் குவித்தார். ஆவரேஜ் 60.40. இத்தொடரில் தனிநபரின் இரண்டாவது அதிகபட்ச மொத்த ஸ்கோர் இதுவாகும்.
இவ்வளவு ரன்கள் அடித்த திருப்தியில் இருந்த கம்ரான் அக்மல், எப்படியும் பாகிஸ்தான் அணிக்குள் நுழைந்துவிடலாம் என்று நம்பினார். ஆனால், தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வுக் குழுத் தலைவரான மிஸ்பா உல் ஹக் வங்கதேச தொடருக்கு எதிரான அணியை அறிவித்த போது, அதில் அக்மல் பெயர் இடம் பெறவில்லை.
இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளான கம்ரான் அக்மல் விரக்தியில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் செய்தி சேனலான AAPயிடம் பேசிய அக்மல், "நான் மனம் தளரவில்லை, ஆனால் எதற்கும் ஒரு எல்லை உள்ளது. 5 வருடங்கள் ஆகிவிட்டன. நான் இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் விளையாடி நிரூபித்தால் என்னை தேர்வு செய்வது குறித்து பரிசீலிப்பார்களா? நான் பாகிஸ்தானின் வீரர். நான் 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன், இன்னும் நான் எவ்வளவு பொறுத்துக்கொள்ள வேண்டும்? நான் பிரதமரிடம் சென்று, 5 ஆண்டுகளாக இதுதான் எனது செயல்திறன் என்று சொல்ல வேண்டுமா? சிறப்பான செயல்பாடுகளுடன் ஒரு வீரர் எனக்கு முன்னால் விளையாடுகிறார் என்றால், அது நல்லது. குறைந்தபட்சம் ஒரு விக்கெட் கீப்பராகவாவது என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.
"டி 20 இல் இடம் கிடைக்கிறது, ஆனால் நீங்கள் வேறொருவரை வலுக்கட்டாயமாக விளையாட அனுப்புகிறீர்கள். இது பாகிஸ்தானின் அணி, பாகிஸ்தானை முன்னால் வைத்திருங்கள். யாராவது சிறப்பாக விளையாடினால், அவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். என்னைப் போன்ற பல வீரர்கள் தகுதியானவர்கள், ஃபவாத் ஆலம் போன்றவர்கள், அவரது செயல்பாட்டை பாருங்கள். அவரும் தனது எல்லையை எட்டிவிட்டார். நான் சிறப்பாக விளையாடாமல் பேசுகிறேனா?.
“ஒரு உலகக் கோப்பை வரவிருக்கிறது. பி.எஸ்.எல், உட்பட உள்நாட்டில் எல்லா கிரிக்கெட் வடிவங்களிலும் நான் தான் சிறந்த வீரராக செயல்பட்டுள்ளேன். மிஸ்பா இந்த விஷயங்களைப் பார்க்க வேண்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.