10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs GT LIVE Cricket Score, IPL 2025
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணியில் இருந்து சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி குஜராத் பவுலர்களை திணறச் செய்தனர். குறிப்பாக, இருவருமே அரை சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.
இவர்களில் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரஸல்லிடம் தனது விக்கெட்டை இழந்தார். எனினும், அடுத்ததாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், ஷுப்மன் கில்லுடன் கரம் கோர்த்து அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினார்.
இதில், 55 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசிய ஷுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ராகுல் திவாட்டியா ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால், ஜாஸ் பட்லர் 23 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங்கை தொடங்கியது.
கொல்கத்தாவில் இருந்து ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 1 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். சுனில் நரேனும் 17 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ரஹானே மட்டும் 50 ரன்கள் அடித்து அணியின் ரன்ரேட்டை ஓரளவிற்கு உயர்த்தினார். ஆனால், அவரும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
மேலும், வெங்கடேஷ் ஐயர் 14 ரன்களிலும், ரிங்கு சிங் 17 ரன்களிலும், ரஸ்ஸல் 21 ரன்களிலும், ரமன்தீப் சிங் 1 ரன்னிலும், மோயின் அலி ரன்கள் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கொல்கத்தா அணியால் இலக்கை நோக்கி நகர முடியவில்லை. ரகுவன்சி மட்டும் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
குஜராத் அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா மற்றும் ப்ரசித் கிருஷ்ணா ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இறுதியாக 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.