10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs PBKS LIVE Cricket Score, IPL 2025
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணியில் இருந்து பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி கொல்கத்தா பவுலர்களை திணறச் செய்தனர்.
குறிப்பாக, பிரியான்ஷ் ஆர்யா 31 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவித்தார். பிரப்சிம்ரன் சிங்கும் தனது பங்கிற்கு 36 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 47 ரன்களை சேர்த்தார். அந்த வகையில், 11 ஓவர்களில் பஞ்சாப் அணி 105 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர், சிறிது நேரத்திலேயே ரஸ்ஸலின் பந்து வீச்சில் பிரியான்ஷ் ஆர்யா அவுட்டானார். ஆனால், 35 பந்துகளில், 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 69 ரன்களை அவர் குவித்தார். இதன் பின்னர், ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். மறுமுனையில், பிரப்சிம்ரன் சிங் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து. அந்த வகையில், 49 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் பறக்க விட்ட அவர், 83 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை வைபவ் அரோராவிடன் இழந்தார்.
அடுத்ததாக இறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், மார்கோ ஜென்சன் 3 ரன்களில் அவுட்டாகி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். எனினும், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை பஞ்சாப் அணி குவித்தது. ஷ்ரேயஸ் ஐயர் 25 ரன்களுடனும், ஜோஷ் 11 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வகையில், கொல்கத்தா அணியில் இருந்து குர்பாஸ் மற்றும் சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்த நிலையில், மழையின் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.