India-vs-south-africa | kl-rahul: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. இதில், 'பாக்சிங் டே' போட்டியாக முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் டாப் ஆடரில் களமாடிய கேப்டன் ரோகித் சர்மா (5 ரன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (17 ரன்), சுப்மன் கில் (2 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இதன்பிறகு வந்த விராட் கோலி (38) - ஷ்ரேயாஸ் ஐயர் (31) ஜோடி சிறிதும் நேரம் தாக்குப்பிடித்து விக்கெட்டை பறிகொடுத்தது. இந்தியா 92/4 என தத்தளித்து கொண்டிருந்த கடினமான சூழ்நிலையில் ராகுல் கிரீஸுக்கு வந்தார். லோ-ஆடரில் களமாடிய வீரர்களுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அவர் அமைத்து இருந்தார்.
24 ரன்களில் டீன் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஷர்துல் தாக்கூரை ரபாடா ஆட்டமிழக்கச் செய்வதற்கு முன், 7வது விக்கெட்டுக்கு 43 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். விக்கெட்டுகள் சரிந்தாலும், எதிரணிக்கு சவால் விடுத்த ராகுல், வேகமாக 105 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இந்தியாவை வழிநடத்தினார். அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களைக் கூட கடப்பது கடினமாக இருந்திருந்த நிலையில், ராகுலின் அற்புதமான ஆட்டத்தால் 200 ரன்களை தாண்டியது.
2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மேலும் 50 சேர்க்க அவர் உதவுவார் என அனைவரும் நம்பிக்கை வைத்த நிலையில், களம் புகுந்து சில ஓவர்கள் தாக்குப்பிடித்த கே.எல் ராகுல் - சிராஜ் ஜோடியில் சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணாவுடன் ஜோடி அமைத்த ராகுல், சிக்ஸரை பறக்கவிட்டு சதம் விளாசினார்.
மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.
செஞ்சூரியன் - ராகுல் உறவு
இந்நிலையில், செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் தனது 8வது டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தினார். இந்த மைதானத்தில் நடந்த டெஸ்டில் அவர் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதன் மூலம் ராகுல் இந்த சாதனையை எட்டிய முதல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அத்துடன் செஞ்சூரியன் உடனான அவரது உறவு தொடர்கிறது.
ரிஷப் பண்ட்-டிற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற பெருமையையும் ராகுல் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“