13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற கே.எல்.ராகுலை அணியில் சேர்க்க இந்திய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆசியக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் விளையாட அவர் கொழும்பில் இந்திய அணியுடன் சேருவார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் அடுத்த ஒரு மாதத்திற்கு மீதமுள்ள ஒருநாள் போட்டிகளில் ராகுலை விளையாடுவதில் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும் என தெரிகிறது. அண்மையில், இந்திய அணி பேட்டிங் வரிசையில் 5-வது இடத்தில் பேட் செய்யும் ராகுல் அணியில் முதன்மை விக்கெட் கீப்பிங் தேர்வாக இருப்பார் என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தினார். அவரது தொடை காயத்தின் தன்மை எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், அவர் 50 ஓவர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்யும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
"ராகுல் பேட்டிங் செய்யும் போது எந்த புகாரும் இல்லை. கீப்பிங் செய்ய அமர்ந்து எழும் போது தான் அவருக்கு தொடை வலி ஏற்பட்டது. அது கடந்த ஒரு வாரத்தில் நன்றாக உள்ளது. அவர் ஆசிய கோப்பைக்கு கொழும்பில் இந்திய அணியுடன் இணைவார். உலக கோப்பை அணி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
இஷான் ஒரு பேக்-அப் ஓப்பனராகவும், 5-வது இடத்தில் பேட் செய்யக்கூடிய விக்கெட் கீப்பிங் தேர்வாகவும் பார்க்கப்படுகிறார். காயம் காரணமாக நீக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து திரும்பி வரும் வீரர்களை அணி நிர்வாகம் மிகவும் எச்சரிக்கையாக கையாளும். உலகக் கோப்பைக்கு முன்பே காயம் அடைந்த வீரர்கள் தங்கள் திட்டங்களை பெரிய அளவில் சீர்குலைக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மாதம் சொந்த மண்ணில் நடக்கும் மூன்று ஒருநாள் போட்டித் தொடர் ஒரு நியாயமான குறிகாட்டியாக இருக்கும்." என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர்கள் என்று வரும்போது இந்திய அணி நிர்வாகம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இஷான் கிஷன் அணிக்கு முக்கியமானவராகிறார். உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இஷான் மற்றும் ராகுலைத் தவிர வேறு விக்கெட் கீப்பர்கள் இருக்க வாய்ப்பில்லை.ஷர்துல் தாக்கூர் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பார். ஏன்னென்றால், அவரால் லோ-ஆடரில் பேட்டிங் செய்ய முடியும். சரியான விக்கெட்டுகளை கைப்பற்றவும் முடியும்.