10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் கடந்த 22 ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Does Langer have brains?’ Kris Srikkanth blasts LSG coach on Pant’s batting
இந்த ஆட்டத்தில் லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், 20 ஓவர்களில் மீதம் 2 பந்துகள் மட்டுமே இருந்த சூழலில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 7-வது வீரராக பேட்டிங் ஆட வந்தார். இதனைப் பார்த்த அனைவரும் வியந்து போயினர். பண்ட் ஆட்டத்தின் கடைசி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
முன்னதாக, டக்-அவுட்டில் அமர்ந்து 19-வது ஓவரில் பேட்டிங் செய்ய தனது முறைக்காக காத்திருந்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கானுடன் பண்ட் பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது.
இந்த நிலையில், ஜாகீர் - பண்ட் இடையேயான வாதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். 'ஜஸ்டின் லாங்கருக்கு மூளை இருக்கிறதா?' எனக் கேள்வி எழுப்பி கடுமையாக சாடி இருக்கிறார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் தனது யூடியூப் நிகழ்ச்சியான சீக்கி சீகாவில் "எனக்குப் புரியவில்லை. அவர் (ரிஷப் பண்ட்) ஏன் இரண்டு பந்துகளுக்கு மட்டும் பேட்டிங் செய்ய வந்தார்?. லாங்கர் என்ன செய்ய முயற்சிக்கிறார்? அணி நிர்வாகம் என்ன செய்ய முயற்சிக்கிறது? ஜாகீர் கான் என்ன செய்ய முயற்சிக்கிறார்?
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய உள்ளே செல்ல விரும்பி இருக்கிறார். ஆனால் அவரை அனுமதிக்கவில்லை என்று சிலர் என்னிடம் கூறுகிறார்கள். அவர் ஒரு கேப்டன். உள்ளே செல்ல அவருக்கு ஏன் யாருடைய அனுமதியை பெற வேண்டும். இறுதியில் அது அணி நிர்வாகத்தின் முடிவாகத்தான் இருக்கும். எல்லோரும் அங்கே தான் அமர்ந்திருக்கிறார்கள். லாங்கரும் அங்கே இருக்கிறார். அவருக்கு மூளையே இல்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனிடையே, ஜியோஹாட்ஸ்டாரில், மற்றொரு முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளேவும் இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். “தாமதமாக வந்து குறைந்த அழுத்தத்தில் சுதந்திரமாக பேட்டிங் செய்ய விரும்பினாலும் பரவாயில்லை, ஆனால் இது மிகவும் தாமதமானது. ரிஷப் காட்டும் விரக்தி, அவர் தவறு செய்திருப்பது தெளிவாகிறது. அவர் ஒருவேளை டாப் ஆடரில் பேட்டிங் செய்ய விரும்பி இருப்பார். இப்போது கடைசி நேரத்தில் வருகிறார். இது அவருடைய முடிவா? அல்லது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் முடிவா அல்லது ஆலோசகரான ஜாகீர் கானின் முடிவா? அது யாருடைய முடிவு?. ஏனெனில், பண்ட் மிகவும் விரக்தியடைந்தவராகத் தெரிந்தார், ”என்று அவர் கூறினார்.