வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் இன்று (டிச.4 ஞாயிற்றுக்கிழமை) இந்தியா- வங்கதேச அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் குல்தீப் சென் அறிமுகமானார். இவர் மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர், ஏற்கனவே இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இல் ஒரு சிறந்த நட்சத்திரமாக இருந்தார். 26 வயதான குல்தீப் சென் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
அங்கு அவரது வேகமான துல்லிய பந்துவீச்சை காட்டி மிரட்டினார். இதனால் இந்திய அணியில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.
இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சிறிய அளவிலான ஒரு முடித் திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவருக்கு 4 உடன்பிறந்தவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மாநிலத்தின் ரஞ்சி போட்டியில் இடம் பிடித்தார்.
அங்கு சிறப்பான பந்து வீச்சை காண்பித்து மிரட்டினார். அவர் 2018 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் 8 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பின்னர் இவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தது. 2022ஆம் ஆண்டு இவரை 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.
அவர் ஐபிஎல் 2022 இல் RRக்காக 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஐபிஎல் போட்டி ஆகும்.
தற்போது அவர் இந்திய அணிக்கு தேர்வாகி விளையாடிவருகிறார். அவரது பந்து வீச்சை நாடு முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/