9-வது டி.என்.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கி நடக்கிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த வாரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஜூலை 6 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது.
நடப்பு டி.என்.பி.எல். தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த கோவை கிங்சை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற திண்டுக்கல் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியில், விஷால் வைத்தியா லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விஷால் வைத்தியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், லோகேஷ்வர் 12 பந்துகளில் 15ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடிய பாலசுப்பிரமணியும் சச்சின், அரைசதம் கடந்த நிலையில், 38 பந்துகளில், 6 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சித்தார்த், கேப்டன் ஷாருக்கான் ஆகியோர் தலா 25 ரன்களும், பிரதீப் விஷால் 7 ரன்களும், ஜித்தேந்தர குமார் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 8 விக்கெட் இழப்பிற்கு, 149 ரன்கள் எடுத்துள்ளது. திண்டுக்கல் அணி தரப்பில், வாரியர், அஷ்வின், பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 150 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியில், கேப்டன் அஷ்வின், ஷிவம் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 12 பந்துகளை சந்தித்த அஷ்வின் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விமல் குமார் 26 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், ஹன்னி சைனி 4 பந்துகளில் ஒரு பவுண்டரி 1 சிக்சருடன் 12 ரன்க்ள எடுத்து ஆட்டமிழந்தார்,
ஒரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில், அதிரடியாக விளையாடிய ஷிவம் சிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். 17.2 ஓவர்களில், திண்டுக்கல் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த ஷிவம் சிங் 50 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்தார். பாபா இந்திரஜித் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
லைகா கோவை கிங்ஸ்: கே விஷால் வைத்தியா, சுரேஷ் லோகேஷ்வர் (விக்கெட் கீப்பர்), பாலசுப்ரமணியம் சச்சின், ஆண்ட்ரே சித்தார்த் சி, ஷாருக் கான் (கேப்டன்), ஜிதேந்திர குமார், பிரதீப் விஷால் எல், மணிமாறன் சித்தார்த், பி புவனேஸ்வரன், ராமலிங்கம் ரோஹித், ஜாதவேத் சுப்ரமணியன்.
திண்டுக்கல் டிராகன்ஸ்: சிவம் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), விமல் குமார், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), மான் பாஃப்னா, ஆகாஷ் சர்மா, எம் கார்த்திக் சரண், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், டிடி சந்திரசேகர், கணேசன் பெரியசாமி
நேருக்கு நேர்
டி.என்.பி.எல். தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் திண்டுக்கல் 6 முறையும், கோவை 4 தடவையும் வென்றுள்ளன.