10 அணிகள் பங்கேற்றஇந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டி வருகிற சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5-ல் வெற்றி, 6-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்த சீசனை அதிரடியாகத் தொடங்கிய லக்னோ தற்போது பிளேஆஃப்க்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான அந்த அணி மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், தகுதி பெற மும்பை மற்றும் டெல்லி அணி ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டங்களில் வெற்றி பெறாமல் இருக்க வேண்டும் என்கிற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் தரிசனம் செய்திருக்கிறார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த அவரது குடும்பத்தினர், தங்கத்தில் ஆனா கை, கால் காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது சஞ்சீவ் கோயங்கா திருப்பதியில் வழங்கிய காணிக்கையின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. அதன் மதிப்பு 6 கோடி இருக்கும் என சிலர் குறிப்பிடுகிறார்கள். அதேநேரத்தில் ரூ. 7 கோடி இருக்கும் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.