10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs DC LIVE Cricket Score, IPL 2025
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தீர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியில் இருந்து எய்டன் மார்க்ரம் மற்றும் மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தினர்.
குறிப்பாக, எய்டன் மார்க்ரம் அரை சதம் விளாசினர். அதன்படி, 33 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்த அவர் 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மற்றொரு புறம், மிட்சேல் மார்ஷ் நிதானமாக விளையாடினார். அவருடன் கரம் கோர்த்த நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன் தொடர்ச்சியாக களமிறங்கிய அப்துல் சமதும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், லக்னோ அணி ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியது. மிட்சேல் மார்ஷும் 45 ரன்கள் எடுத்த நிலையில், முகேஷ் குமாரிடம் தனது விக்கெட்டை இழந்தார். ஆயுஷ் படோனி தனது பங்கிற்கு 36 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் ரன்கள் ஏதும் எடுக்காமலே பெவிலியன் திரும்பினார். இறுதியாக டேவிட் மில்லர் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்குகியது.
டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் போரெல் மற்றும் கருன் நாயர் ஆகியோர் களமிறங்கினர். இதில் கருன் நாயர் 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அபிஷேக் மற்றும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். அதன்படி, 36 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 51 ரன்கள் குவித்த அபிஷேக்கின் விக்கெட்டை எய்டன் மார்க்ரம் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து அக்ஸர் படேல் களமிறங்கினார்.
அந்த வகையில், படேலும், கே.எல். ராகுலும் டெல்லி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 42 பந்துகளில் மூன்று சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் விளாசிய கே.எல் ராகுல், 57 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மற்றொரு புறம், அக்ஸர் படேலும் 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசி 34 ரன்கள் குவித்தார்.
டெல்லி அணி 17.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணியில் இருந்து எய்டன் மார்க்ரம் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.