IPL 2024 | Mumbai Indians | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு லக்னோவில் தொடங்கும் 48-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs MI LIVE Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியில், ரோகித் சர்மா – இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தனது 37-வது வயதில் அடியெடுத்து வைத்த ரோகித் சர்மா, ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய நிலையில், 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்களுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் கணக்கை தொடங்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தும் வெளியேறினர். திலக் வார்மா 7 ரன்களில் வீழ்ந்தார். தொடர்ந்து களமிறங்கிய வாதரோ தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் சேர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.
இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய வாதரோ 41 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து இஷான் கிஷன் 36 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் அசத்திய டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. லக்னோ அணி தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகளும், ஸ்டொயினிஸ், நவீன், மயங்க், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 145 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய குல்கர்னி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டோயினிஸ் கேப்டன் ராகுலுடன் இணைந்து நிதமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தபோது, ராகுல் 22 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தீபக் ஷூடா 18 பந்துகளில் 18 ரன்களும், அரைசதம் கடந்த ஸ்டோயினிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்களும், அறிமுக வீரராக களமிறங்கிய டர்னர் 5 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 11 பந்துகளில் லக்னோ அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பூரன் – குணால் பாண்டியா களத்தில் இருந்தனர்.
ஹர்திக் பாண்டிய வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்த நிலையில், முகமது நபி வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் 14 ரன்களுடனும், குணால் பாண்டியா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும், துஷாரா கோட்சி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் மும்பை அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், 10 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற லக்னோ அணி 10 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“