10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சூழலில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று செவ்வாய்க்கிழமை லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் (70-வது) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்துவிடும்.
அது பிளே ஆப் சுற்றில் அந்த அணிக்கு கூடுதல் நன்மையாக அமையும். எனவே அதற்கான பெங்களூரு அணி முழு மூச்சுடன் போராட உள்ளது. மறுபுறம் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி பஞ்சாப் கிங்ஸ் முதல் அணியாக டாப்-2 இடத்தை உறுதி செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால் 2-வது அணியாக டாப்-2 இடத்தை உறுதி செய்யும். தோல்வியடைந்தால் குஜராத் டைட்டன்ஸ் 2-வது இடத்தை உறுதி செய்யும். பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கும்.
ஐ.பி.எல். 2025 தொடரில், லீக் சுற்றுப் போட்டிகளில் கடைசி லீக் (70-வது) ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. இதில், லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆர்.சி.பி அணியின் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, எல்.எஸ்.ஜி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ பிரீத்ஜ்கே பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிரீட்ஸ்கே 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். பண்ட் மற்றும் மார்ஷ் இணை அபாரமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அசத்தினர். இதில் மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து தனது அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். 5.4 ஓவர்களில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி பிரிந்தது. சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த படிதார் 14 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் சந்தித்த கோல்டன் டக் அவுட் ஆனார். இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வில்லியம் ஒரூர்க் வீழ்த்தினார்.
பின்னர் மயங்க் அகர்வால் களமிறங்கினார். அவரும் அதிரடியில் பட்டையை கிளப்ப பெங்களூரு அணி வெற்றியை நோக்கி பயணித்தது. இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே விராட் (54 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா லக்னோ பந்துவீச்சை வெளுத்து வாங்க ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. 49 ரன்களில் இருந்த சமயத்தில் திக்வேஷ் ரதி வீசிய ப்ரிஹீட் பந்தால் கேட்சில் இருந்து தப்பித்த ஜிதேஷ் சர்மா வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
முடிவில் வெறும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூரு 230 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மா 85 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்த பெங்களூரு கம்பீரமாக பிளே ஆப் சுற்றில் விளையாட உள்ளது.