Madurai Panthers vs IDream Tiruppur Tamizhans, 27th Match Tamil News: 8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு இடத்தில் கால்பதிக்கும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இந்த ஒரு இடத்திற்கு நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இன்றைய முக்கியமான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி கண்டால் 8 புள்ளியுடன் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மதுரை தோல்வி அடைந்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை, திருப்பூர் தமிழன்ஸ் மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது அந்த அணிகளின் நெட் ரன்ரேட் தீர்மானிக்கும். ரன்ரேட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (0.683) வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
திருப்பூர் - மதுரை அணிகள் இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் முடிவில், திருப்பூர் அணியை வீழ்த்தி மதுரை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் சுரேஷ் லோகேஸ்வர், ஹரி நிஷாந்த் இருவரும் அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஹரி நிஷாந்த் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆதித்யா அதிரடியாக விளையாடினார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் லோகேஸ்வர் 44 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து ஆதித்யா 37 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதனால், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் இலக்குடன் திருப்பூர் அணி விளையாடியது.
திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய விஷ்னு வைத்யா 21 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விவேக் 11 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்களும் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் திருப்பூர் அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரு பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என 10 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. எனினும், அடுத்த பந்துகளை குர்ஜப்னீத் சிங் துல்லியமாக வீசியதால், திருப்பூர் பேட்ஸ்மேன்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.
இறுதியில் திருப்பூர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களே எடுக்கமுடிந்தது. இதன் மூலம் பரபரப்பான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றிபெற்றது.
இதன் மூலம் மதுரை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால், திருப்பூர் மற்றும் சேப்பாக் அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil