இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அவரது வருகைக்குப் பின் இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 20 ஆண்டுக்குப் பிறகு இழந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்திற்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனது. மேலும், 10 ஆண்டுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது.
கம்பீர் தலைமையிலான இந்திய அணி டி20 போட்டிகளில் சிறப்பாக இருந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக என தாங்கள் பங்கேற்ற கடைசி எட்டு டெஸ்டில் ஆறில் தோல்வியடைந்து இருக்கிறது. இதன் விளைவாக, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியாமல் போனது.
இதையடுத்து, கம்பீர் மீதும் இந்திய அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் இந்திய மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி
வீரரான மனோஜ் திவாரி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரை ஒரு 'நயவஞ்சகர்' என்றும் திவாரி முத்திரை குத்தியுள்ளார்.
திவாரியும் கம்பீரும் கடந்த காலங்களில் இந்தியன் பிரீமியர் லீக்கில் மட்டுமின்றி டெல்லி மாநில அணிக்காகவும் அணி வீரர்களாக இருந்துள்ளனர். அண்மையில் கம்பீருக்கு எதிராக திவாரி விமர்சனங்களை வைத்திருந்தார். அப்போது அவருக்கு ஆதரவு களத்தில் குதித்தார் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் டெஸ்ட் அறிமுகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா. ஆனால், ராணா கம்பீருக்கு ஆதரவாக பேசியது திவாரியை ஆச்சரியப்படுத்தவில்லை.
இது தொடர்பாக மனோஜ் திவாரி பேசுகையில், "நிதிஷ் ராணா மற்றும் ஹர்ஷித் ராணா, கவுதம் கம்பீரை ஏன் ஆதரிக்க மாட்டார்கள்? ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா பெர்த்தில் விளையாடினார். அது எப்படி சாத்தியம்? ஆகாஷ் தீப் என்ன தவறு செய்தார்? அவர் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அற்புதமான ஓவர்களை வீசினார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக, நீங்கள் நட்பு சூழ்நிலையில் பந்துவீச வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள், ஆனால் நீங்கள் அவரை வீழ்த்திவிட்டு ஹர்ஷித்துடன் சென்றீர்கள். ஆகாஷ் தீப் அற்புதமான சாதனைகளை படைத்துள்ளார், அதனால்தான் வீரர்கள் அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நான் பேசுவது எல்லாம் பி.ஆர்-கள் பற்றிதான். ஏதாவது அல்லது யாரோ உண்மைகளைப் பேசும்போது, அவர்கள் அந்த தனி நபரைப் பாதுகாக்க வருகிறார்கள், ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் உண்மைகளை மட்டுமே பேசுகிறேன். அந்த விஷயத்தில், பி.ஆர்-கள் மிகவும் தெளிவாக உள்ளனர்.
டெல்லியில் நடந்த ரஞ்சி டிராபி போட்டியில் என்னுடன் சண்டையிட்டபோது, கவுதம் கம்பீர் வாயில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் அனைவரும் கேட்டனர். அவர் சவுரவ் கங்குலியை பற்றி தவறாக பேசினாலோ அல்லது என் குடும்பத்தை அவதூறு செய்தாலோ, ஒரு சில நபர்களால் அவர் பாதுகாக்கப்பட்டார். இதைத்தான் பி.ஆர்-கள் செய்யும் வேலை என்கிறேன்.
இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்து விளையாடும் லெவன் அணியில் தேர்வு செய்யும் பணி சரியாக நடக்கவில்லை. ஹர்ஷித் ராணாவுக்கு ஆதரவாக ஆகாஷ் தீப் நீக்கப்பட்டார். ஹர்ஷித் மிகவும் நல்லவர் என்று நீங்கள் நினைத்திருந்தால், தொடர் முழுவதும் ஏன் அவருடன் தொடரவில்லை? ஆகாஷ் தீப்புக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை
தேவ்தத் படிக்கல் எப்படி டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். சமன்பாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அபிமன்யு ஈஸ்வரன் இருந்தபோதும், இடைவிடாமல் இத்தனை ரன்களை அடித்தபோதும் அவர் எப்படி அணியில் சேர்க்கப்பட்டார்? இத்தனை ரன்களை எடுத்துள்ள அபிமன்யு ஈஸ்வரன் ஏன் தேர்வு செய்யப்படவில்லை மற்றும் நம்பர் 3 இல் விளையாடவில்லை. இந்த வகையான விஷயங்கள் நடக்கின்றன, மேலும் முடிவுகள் அனைவருக்கும் தெரியும்" என்று அவர் கூறினார்.