Mary Kom In AIBA World Boxing: உலக குத்துச்சண்டைப் போட்டியில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார் மேரி கோம். இதனால் வெண்கலப் பதக்கத்துக்கு போட்டியிட்டு திருப்திப்பட வேண்டியதாகிறது.
Advertisment
உலக குத்துச்சண்டைப் போட்டி ரஷ்யாவில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் துருக்கியின் புஸ் நாஸ் காகிரோக்லு-வுடன் மோதினார். புதிய எடைப் பிரிவில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை நோக்கிப் பயணித்த மேரி கோமுக்கு ஏமாற்றமே கிடைத்தது, 1-4 என்ற ரவுண்ட் கணக்கில் தோற்றார் மேரி கோம்.
36 வயதான மேரி கோம் இதுவரை உலகப் போட்டிகளில் 6 பட்டங்கள், ஒரு ஒலிம்பிக் வெண்கலம் (2012), ஆசியப் போட்டியில் 5 பட்டங்கள், காமன்வெல்த் மற்றும் பல சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றவர். துருக்கி வீராங்கனைக்கு எதிரான இந்த அரை இறுதிப் போட்டியின் முதல் ரவுண்டில் அட்டாக், டிபென்ஸ் ஆகிய இரண்டிலும் சமாளித்து வென்றார் கோம். ஆனால் 2-ம், 3-ம் ரவுண்ட்களில் துருக்கி வீராங்கனையில் ஆதிக்கம் மேலோங்கியது.
இந்த ஆட்டத்தில் இந்தியக் குழுவினரின் அப்பீல் குத்துச்சண்டைப் போட்டியின் தொழில்நுட்பக் குழுவால் ஏற்கப்படவில்லை. இது மேரி கோமுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. போட்டிக்கு பிறகு அவர் வெளியிட்ட ட்வீட்டில், ‘எப்படி, ஏன்? இந்த முடிவில் எவ்வளவு சரி, தவறு என்பது உலகத்திற்கு தெரியட்டும்’ என குறிப்பிட்டு பிரதமர் மோடி, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிர்ரென் ரிஜ்ஜு ஆகியோரை ‘டேக்’ செய்திருக்கிறார்.