ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டிக்கான இறுதி போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள செவில்லே நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் பார்சிலோனா அணியும் அத்லெடிக் பில்பாவ் அணியும் மோதிக் கொண்டன. தொடக்கம் முதலே விறு விறுப்பாக நடந்த இந்த போட்டியில் அத்லெடிக் பில்பாவ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் போது பார்சிலோனா அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி அத்லெடிக் பில்பாவ் அணியைச் சேர்ந்த ஆசியர் வில்லலிப்ரேவை தாக்கியுள்ளார். மெஸ்சி எதிரணி வீரர் வில்லலிப்ரேவை தாக்கிய போது அவர் அருகில் கால் பந்து காணப்படவில்லை. இது அங்கிருந்த கேமராவிலும் பதிவானது, பின்னர் களத்தில் இருந்த நடுவருக்கு மெஸ்சி தாக்கியது பற்றி தெரியப்படுத்தப் பட்டது. இதையடுத்து அவருக்கு ஆட்ட நடுவர் 'ரெட் காட்' வழங்கினார்.
"மெஸ்சி பந்து அருகில் இல்லாத போது மிகக் கடுமையாக ஆசியர் வில்லலிப்ரேவை தாக்கியுள்ளார். எனவே அவருக்கு ரெட் காட் வழங்கப்பட்டுள்ளது" என்று நடுவர் கில் மன்சானோ கூறியுள்ளார்.
லியோனல் மெஸ்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். இவர் கிளப் போட்டிகளில் ரெட் காட் பெறுவது இதுவே முதல் தடவை ஆகும். ஆனால் அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய போது இரண்டு முறை ரெட் காட் பெற்றுள்ளார். 2005-ம் ஆண்டு ஹங்கேரி அணிக்கு எதிராக விளையாடிய போதும், 2019-ம் ஆண்டு சிலி அணிக்கு எதிராக விளையாடிய போதும் அவருக்கு ரெட் காட் வழங்கப்பட்டுள்ளது.லியோனல் மெஸ்சிக்கு ரெட் காட் வழங்கியது பற்றி ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருந்த போதிலும் அவருக்கு 3 முதல் 12 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் எனத் தெரிகின்றது. மெஸ்சி தாக்கியது உறுதியாகினால் அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்படும் . அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், அவரால் ஸ்பானிஷ் லீக் (அல்லது) கோபா டெல் ரே போட்டியில் விளையாட முடியாது. ஸ்பானிஷ் லீக் தொடரில் பார்சிலோனா அணி 32 சுற்றில் உள்ளது, அதோடு ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகளை சந்திக்க உள்ளது. மற்றும் பார்சிலோனா அணிக்கான 32 சுற்றில் நடக்கும் போட்டி, வரும் வியாழக்கிழமை ஸ்பெயினில் உள்ள கார்னெல்லில் நடக்க உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil