IPL 2024 | Mumbai Indians | Kolkata Knight Riders: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs KKR Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட், 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகுவன்சி 6 பந்துகளில் 2 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா ஓவரில் ஒரு சிக்சர் விளாசிய சுனில் நரைன் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரோயாஸ் அய்யர் 6 ரன்களிலும், ரின்கு சிங் 9 ரன்களிலும் வீழ்ந்ததால் கொல்கத்தா அணி ரன் குவிக்க தடுமாறியது. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் வெங்கடேஷ் அய்யர் அசத்தலாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு, 83 ரன்கள் சேர்த்த நிலையில், மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்த நிலையில், அரைசதம் கடந்த வெங்கடேஷ் அய்யர் 52 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 70 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.
19.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மும்பை அணி தரப்பில் பும்ரா, துஷாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹர்த்திக் பாண்டிய 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பதே அதிர்ச்சி அளிக்கும் வகையில், இஷான் கிஷன் 7 பந்துகளில் 13 ரன்களுக்கும், நமன் தார் 11 பந்துகளில் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 12 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 11 ரன்களுக்கு வெளியேறினார்.
அடுத்து வந்த திலக் வர்மா 4, வாதரோ 6, ஹர்த்திக் பாண்டியா 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், சூர்யகுமார் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டிம் டேவிட் சிறப்பாக விளையாடிய நிலையில், சூர்யகுமார் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், 35 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து டிம் டேவிட்டும் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி தரப்பில் மீச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, நரேன், ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த தோல்வியின் மூலம் மும்பை அணியின் ப்ளேஅப் கனவு கட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“