18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் -ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா(12 ரன்கள்) 3-வது ஓவரில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் உடன் ரியான் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்தார்.
ரியான் ரிக்கல்டன்(6 பவுண்டரி, 4 சிக்ஸர்) அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்த அவர், 9-வது ஓவரில் திக்விஜேஷ் ரத்தி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய வில் ஜாக்ஸ், 29 ரன்கள் எடுத்த நிலையில், பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ்(4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்) 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய நமன் திர்(25 ரன்கள்) மற்றும் கார்பின் போஷ்(20 ரன்கள்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதையடுத்து மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்-மார்க்ரம் களமிறங்கினர். இதில் மார்க்ரம் 9 ரன்களில் பும்ராவின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து ஆட வந்த நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசி 27 ரன்களில் பூரன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கேப்டன் ரிஷப் பண்ட், 4 ரன்களில் அவுட் ஆகினார்.ஆட்டத்தின் 16-வது ஓவரில் டேவிட் மில்லர்(24 ரன்கள்), அப்துல் சமத்(2 ரன்கள்) மற்றும் ஆவேஷ் கான்(0) ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது.