இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக கலக்கிய சுப்மன் கில் ஆசியக் கோப்பையில் தடுமாறிய நிலையில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி பந்தை விளாசுவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பி.சி.சி.ஐ நிர்வாகம் இந்திய அணியை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்வதற்கு தயார் செய்து வருகிறது.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஆசியக் கோப்பை தொடர் முடிந்தவுடன், இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான தயாரிப்புகளில் இந்திய முக்கிய வீரர்கள் ஈடுபட்டு இருக்க, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் துவக்க வீரராக தொடர்ச்சியாக விளையாட சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுப்மன் கில் சதம், இரட்டை சதம் என்று விளாசித் தனது இடத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலி நம்பிக்கையுடன் புகழப்பட்டார்.
ஆனால், ஐ.பி.எல் தொடர் முடிந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில் பேட்டிங்கில் சொதப்பினார். ரன்கள் எடுக்க தடுமாறினார், இதனால், அவர் மீதான நம்பிக்கை மெதுவாக குறைந்தது.
ஆசியக் கோப்பையில் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 32 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி உடன் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். எப்போதும் அதிரடியாக விளையாடும் சுப்மன் கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெஸ்ட் போட்டியைப் போல விளையாடினார். அதிலும் ஷாகின் அஃப்ரிடி பந்தை மிக மோசமாக எதிர்கொண்டார். அடுத்து, நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்து மீண்டும் நம்பிக்கை அளித்தார்.
இந்நிலையில், சுப்மன் கில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி பந்தை விளாசுவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அறிவுரை கூறியுள்ளார்.
தற்பொழுது இவர் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் “பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில் எந்த இன்டெண்டையும் காட்டவில்லை. அவர் 32 பந்துகளை எதிர்கொண்டார். அவருக்கு ஒரு பவுண்டரி லெக்சைடில் மட்டுமே வந்தது. எனவே அவர் இன்டெண்ட் காட்டுவதில் வேலை செய்ய வேண்டும்.
பந்து வேகமாக ஸ்விங் ஆகி வரும்பொழுது, நீங்கள் வேகமாக உங்களுடைய பொசிஷனுக்கு வருவது முக்கியம். இதுவெல்லாம் நீங்கள் வலை பயிற்சிகளில் பயிற்சி செய்து முன்னேற வேண்டும்.
சைட் ஆர்ம் த்ரோ வீசக்கூடியவர்கள், பந்தை ஷேப் செய்து வீசுவார்கள். இந்த பயிற்சி நிச்சயம் கில்லுக்கு உதவி செய்யும். பாகிஸ்தானுக்கு எதிராக அவரால் சரியான நேரத்தில் பேட்டை கீழே இறக்க முடியவில்லை. ஸ்டெம்ப்புகள் தெரிந்தன. இந்த முறையில் பந்தை எறிபவரை வைத்து பயிற்சி செய்தால், நிச்சயம் அவர் பேட்டை கீழே சீக்கிரம் இறக்குவதை பந்தை எறிபவர் பரிசோதிப்பார். இது ஷாகின் அப்ரிடியை எதிர்கொள்வதற்கு கில்லுக்கு மிக உதவியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“