இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை இத்தொடருக்கான அணியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 34 வயதான ஷமி நீண்ட நேரம் பந்து வீச முடியாது என்று பி.சி.சி.ஐ மருத்துவக் குழு இந்திய வாரியத்திற்குத் தெரிவித்துள்ளது. அதனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.
ஷமியை இந்திய அணியுடன் சேர்த்து சில போட்டிகளில் விளையாட வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஜஸ்பிரித் பும்ரா தனக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படலாம் என்றும், தன்னால் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆட முடியாது என்றும் தெரிவித்ததால், தேர்வுக் குழு இதேபோன்ற நிலையில் இருக்கும் பந்து வீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது குறித்து குழப்பத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. ஷமி ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும் என்பதால், அவர் இந்திய அணியின் திட்டமிடலுக்கும் இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mohammed Shami unlikely for England Test series; ability to bowl long spells a concern
அணிக்கு தேவை ஏற்படும் போதும் நீண்ட நேரம் பந்து வீசக்கூடிய தகுதியான பந்து வீச்சாளர்களை இந்திய அணியில் சேர்க்க தேர்வுக்குழு உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது. "ஐ.பி.எல்-லில் ஷமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக நான்கு ஓவர்கள் வீசுகிறார், ஆனால் ஒரு நாளில் 10 ஓவர்களுக்கு மேல் வீச முடியுமா என்பது வாரியத்திற்கும் தேர்வாளர்களுக்கும் தெரியவில்லை. இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து நீண்ட ஸ்பெல்கள் தேவைப்படலாம், மேலும் நாங்கள் வாய்ப்புகளை எடுக்க முடியாது" என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
ஷமி கடைசியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது 2023 ஆம் ஆண்டு ஓவலில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தான். அவர் 2024-ல் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கிரிக்கெட் ஆடவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் டி20-யில் மீண்டும் களமிறங்கிய அவர், பின்னர் சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்கேற்றார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பை, சமீபத்திய மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் ஷமி பங்கேற்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. "நான் ஒரு வருடம் முழுவதும் காத்திருந்தேன், மிகவும் கடினமாக உழைத்தேன். ஓடும்போது கூட என்ன நடக்கும், என்ன நடக்காது என்று பயம் இருந்தது. முழு வீச்சில் இருக்கும்போது எந்த வீரருக்கும் காயம் ஏற்படுவது மிகவும் கடினம். பின்னர் மறுவாழ்வுக்காக என்.சி.ஏ.வுக்குச் சென்று மீண்டும் வந்தேன். நான் காயங்களைச் சந்திக்கும்போது, ஒரு தடகள வீரராக வலுவடைவதாக நான் உணர்கிறேன். ஏனென்றால் நீங்கள் மன ரீதியாக வலுவாக இருக்கும்போது நிறைய விஷயங்களை மீண்டும் செய்ய வேண்டும்," என்று ஷமி பி.சி.சி.ஐ டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
ஷமி டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அல்லது ஹரியானா வலது கை வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடும். அவர் 22 முதல் தர போட்டிகளில் இருந்து 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் கென்ட்டை பிரதிநிதித்துவப்படுத்திய கவுண்டி கிரிக்கெட் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அர்ஷ்தீப்-புக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்து பயணம் காரணமாக தேர்வுக் குழு ஏற்கனவே காம்போஜை இந்தியா ஏ அணிக்கு தேர்வு செய்திருந்தது.
ஐந்து பேர் கொண்ட இந்திய சீனியர் அணி தேர்வுக் குழு இன்னும் சில நாட்களில் கூடி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த சுப்மன் கில் முன்னணியில் இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. கில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரை சந்தித்ததாகவும் அறியப்படுகிறது.