ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மோதல்
இந்நிலையில், இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். மேலும் அவரை நோக்கி "வெளியே போ" என்ற வகையில் சைகை செய்தார். இதனால் அவர்களுக்குள் சிறிது வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அதன் பின் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் "நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்" என்றுதான் சிராஜிடம் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்தபோது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்தார்.
அந்த சூழலில் நேற்றைய ஆட்ட நேரத்தில் பேட்டிங் செய்ய வந்த சிராஜ், பீல்டிங் செய்து கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் நட்பாக சில வார்த்தைகளை பேசினார். இறுதியில் போட்டியின் முடிவிலும் இருவரும் கை கொடுத்து புன்னகையான முகத்துடன் சென்று மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில் தம்மை அவுட்டாக்கியபோது தவறான புரிதலால் அப்படி நடந்து கொண்டதாக சிராஜ் தெரிவித்ததாக டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், "என்னிடம் வந்த சிராஜ் அது கொஞ்சம் தவறான புரிதலால் ஏற்பட்டது என்று சொன்னார். அது நன்றாக இருந்தது. நாங்கள் அங்கிருந்து நகர வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போட்டியில் வென்றதால் எங்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே அதைப் பற்றி மேற்கொண்டு பேசி மகிழ்ச்சியை பாழ்படுத்த விரும்பாதீர்கள்.
அவர் என்னிடம் ஏன் முறைத்தீர்கள்? என்ற வகையில் சொன்னார். அதற்கு பாருங்கள் நான் முதலில் முறைக்கவில்லை ஆனால் இரண்டாவது முறையாக முறைத்தேன் என்று அவரிடம் சொன்னேன். அந்த வகையில் தவறான புரிதலால் நடந்த விஷயங்களுக்காக எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் நட்புடன் இதிலிருந்து நகர்கிறோம்" என்று கூறினார்.
அபராதம்
இந்த நிலையில், அடிலெய்டு மைதான ஆடுகளத்திற்குள் மோதலில் ஈடுபட்டதற்காக, முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருவரும் ஐ.சி.சி.யின் கிரிக்கெட் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் கண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், சிராஜ் மற்றும் ஹெட் ஐ.சி.சி-யால் தண்டிக்கப்பட உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் கடுமையாக கண்டிக்கப்படுவார்கள். ஆனால் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.