ஐபிஎல் சீசனில், ஒவ்வொரு முறையும் மிரட்டும் அணி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் தான். ஆனால், கப் மட்டும் அடிக்க மாட்டோம் என சத்தியப்பிரமாணம் எடுத்து வைத்திருக்கிறது அந்த அணி.
நடந்து முடிந்த 11வது ஐபிஎல் சீசனில் க்ரிஸ் கெயில் கழட்டிவிடப்பட்டாலும், அதற்கு முந்தைய பல சீசன்களில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், கெயில் அதிரடி ராட்சசன்கள் வந்து நின்றால், எதிரணி கேப்டன்கள் கலக்கத்துடனேயே இருப்பார்கள். இதில் ஒருவர் கடைசி வரை நின்றாலும், ஆட்டம் க்ளோஸ்.
ஆனால், இந்த பலமே அவர்களது பலவீனமும் கூட. எந்த சீசனிலும் இவர்களது பவுலிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்ததே இல்லை. அப்படியே தப்பித் தவறி, ஒரு டேஞ்சரான ஃபாஸ்ட் பவுலரை பிடித்துப் போட்டால், அவருக்கு தொடருக்கு முன்பாகவே காயம் வந்து கடைசி வரை விளையாட முடியாமல் போய்விடும்.
அதன்பிறகு, இவர்களும் மூவரும் தான் தத்தி தத்தி அணியை பிளே ஆஃப் கொண்டுச் செல்ல போராட வேண்டும்.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது.
2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை மற்ற அணிக்கு விற்கலாம். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கை மும்பை அணிக்கு விற்றுள்ளது.
2018-ம் ஆண்டு ஏலத்தில் டி காக்கை ரூ.2.8 கோடிக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்து இருந்தது. அந்த தொகைக்கே அவர் மும்பை அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுல பியூட்டி என்னன்னா... கேப்டன் விராட் கோலியையே பெங்களூரு நிர்வாகம் கழட்டி விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது தான். இவரது கேப்டன்ஷிப்பில் இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியாததால் அவரை மாற்றி, புதியவர் ஒருவரை கேப்டனாக்கி பார்க்கலாம் என முடிவாம்!. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.