Duleep Trophy 2024:
துலீப் டிராபி 2024 போட்டிகள் அனந்தபூர் மற்றும் பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா ஏ,பி,சி,டி அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில், பெங்களுருவில் நடந்து வரும் முதலாவது போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் இந்தியா ஏ பவுலர்கள். 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டி இருந்தனர். அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்கள் அடித்தாலும், கேப்டன் அபிமன்யு 13, சர்பராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, நிதிஸ் ரெட்டி 0, வாசிங்டன் சுந்தர் 0, சாய் கிஷோர் 1 என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை அற்புதமான கேட்ச் மூலம் எடுத்தார் கேப்டன் சுப்மன் கில்.
அணியின் மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் முஷீர் கான் 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என துவம்சம் செய்து சதமடித்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். 19 வயதான முஷீர் கானுக்கு இது மூன்றாவது முதல் தர கிரிக்கெட் சதமாகும்.
இந்தியா பி அணி 94/7 என்ற மோசமான நிலையிலிருந்து, 300 ரன்களுக்கு கொண்டுவந்து விட்ட முஷீர் கான் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8வது விக்கெட்டுக்கு நவ்தீப் சைனி மற்றும் முஷீர் கான் இருவரும் இணைந்து 205 ரன்கள் குவித்து அசத்தி இருந்தனர். முஷீர் கான் அவுட் ஆகிய நிலையில், தொடர்ந்து சிறப்பாக ஆடிய நவ்தீப் சைனி அரைசதமடித்து அசத்தினார். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா பி அணி 321 ரன்களை குவித்தது.
தற்போது முதல் இன்னிங்சில் ஆடி வரும் இந்தியா ஏ அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா பி அணியை விட 187 ரன்கள் பின்னிலையில் உள்ளது. கே.எல் ராகுல் 23 ரன்களுடனும், ரியான் பராக் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சச்சின் சாதனை முறியடிப்பு
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் முஷீர் கான் 181 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
முன்னதாக, 1991 ஜனவரியில் கவுகாத்தியில் நடந்த கிழக்கு மண்டலத்திற்கு எதிராக மேற்கு மண்டலத்திற்காக விளையாடிய போது சச்சின் 159 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தார். 19 வயதில் முஷீருக்கு இது மிகப்பெரிய சாதனையாகும். ஆனால் இந்த அம்சத்தில் அதிக ரன்களை எடுத்த யாஷ் துல் மற்றும் பாபா அபராஜித் ஆகியோரை அவரால் கடந்து செல்ல முடியவில்லை.
பாபா அபராஜித் 212 ரன்களை விளாசியுள்ளார். மற்றும் துலீப் டிராபி அறிமுக ஆட்டத்தில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார்.
முஷீர் கான் ஏற்கனவே ஏழு போட்டிகளில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்தை அடித்துள்ள நிலையில், அவரது அதிகபட்ச ஸ்கோர் 203 ரன்களுடன் உள்ளார். அவர் இதுவரை ரெட்-பால் கிரிக்கெட்டில் 11 இன்னிங்ஸில் 64.54 சராசரியில் 710 ரன்கள் குவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“