/indian-express-tamil/media/media_files/2025/06/07/xnJ5IC3wPRJadRGWp6XT.jpg)
நார்வே செஸ்: 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகைசூடிய மேக்னஸ் கார்ல்சன்
2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில், ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில், அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றியாளராக கொள்ளப்படுவார். இந்நிலையில், 10-ம் சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார். இதனால், கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.
இறுதிச்சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் ஃபாபியானோ கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்கு சென்றார். ஃபாபியானோ கருவானா 2-வது இடத்தில் உள்ளார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். ஃபாபியானோ 15.5 புள்ளிகளுடனும் (2-வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3-வது இடம்) உள்ளனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 4-வது இடத்திலும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி கடைசி இடத்திலும் உள்ளனர்.
போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்ல்சன், போட்டி தொடரை வென்றது நிம்மதியளிக்கிறது. போட்டி முடிவு, ரோலர்கோஸ்டர் போன்று இருந்தது. குகேஷ் மற்றும் எரிகைசி நன்றாக விளையாடினார்கள். ஆனால், அவர்கள் இன்னும் தங்களை தயார்படுத்தி கொள்ள சிறிது நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் அர்மீனியாவிலும் நடந்த போட்டி தொடரில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் மிக சிறந்த செஸ் விளையாட்டை வெளிப்படுத்தினர். குகேசுடன் விளையாடியது மனதில் நிற்கும் வகையில் இருந்தது என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.