ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், டெல்லியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வடக்கு ரயில்வே நிர்வாகம் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ரயில்வே செய்தித்தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வடக்கு ரயில்வேயின் மூத்த வணிக மேலாளரும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் பள்ளி அளவிலான விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக சத்ரசால் விளையாட்டு அரங்கத்தின் சிறப்பு அலுவல் அதிகாரியாக டெல்லி அரசால் நியமிக்கப்பட்டார்.
சத்ரசால் விளையாட்டு அரங்கத்தில் 23 வயது மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுஷில் குமார் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் கிட்டத்தட்ட 3 வாரங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று முன் தினம் டெல்லி புறநகர் பகுதியான முண்ட்கா பகுதியில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்ட அஜய் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை ரயில்வே வாரியம் டெல்லி அரசிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை பெற்றது. அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார்” என்று வடக்கு ரயில்வே சிபிஆர்ஓ தீபக் குமார் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஓரிரு நாட்களில், கொலை வழக்கில் கைதாகியுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாரை இடைநீக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2008ம் ஆண்டு சீனாவில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்படி, ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், கொலை வழக்கில் கைதாகியிருப்பது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"