அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்திய அணியின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளர்கள். மேலும், அவர்களின் தாயக வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த பார்படாஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் பெரில் என்கிற வகை 5 புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிரும் ஓட்டலிலேயே இருந்து வந்தார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Open-top bus parade for Rohit Sharma’s T20 World Cup-winning team in Mumbai on Thursday evening, says BCCI
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சொந்த நாடு திரும்ப அவர்களுக்கு என சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை பார்படாஸில் இருந்து டெல்லிக்கு ஏற்கனவே புறப்பட்டுள்ள இந்த விமானம், நாளை மாலை தலைநகர் டெல்லியை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/14c1515f-6ce.jpg)
ஏ.ஐ.சி.24டபிள்யூ.சி - ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை என பெயரிடப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், இந்திய அணி, அதன் உதவி ஊழியர்கள், வீரர்களின் குடும்பங்கள் சில வாரிய அதிகாரிகள் மற்றும் இந்திய பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்டு கொண்டு வர உள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்காக மும்பையில் நாளை வியாழக்கிழமை மாலை திறந்தவெளி பேருந்து அணிவகுப்பு (ஓபன் பஸ் பரேடு) நடத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.
சிறப்பு விமானத்தில் பயணிக்கும் இந்திய வீரர்கள் அடங்கிய குழு, நாளை வியாழக்கிழமை அதிகாலை டெல்லியில் தரையிறங்க உள்ளனர். இதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் காலை உணவில் பங்கேற்க உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, மும்பையில் நடக்கும் திறந்தவெளி பேருந்து அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாலை 4 மணிக்கு மும்பை நாரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் பெரும் திரளான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வீரர்கள் சோர்வாகவும், மனதளவில் அயர்வாகவும் உள்ளனர். அதனால்தான் தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து, நாரிமன் பாயிண்ட் வரை 2 கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்கும் வான்கடே ஸ்டேடியம் வரை குறுகிய திறந்தவெளி பேருந்து அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து பரிசுகள் விநியோகிக்கப்படும், 125 கோடி பரிசுத் தொகையை செயலாளர் பி.சி.சி.ஐ ஜெய் ஷா விநியோகிக்கிறார். "என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
2007 டி-20 உலகக் கோப்பையை வென்ற எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போல் இந்த நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“