ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது .
இந்நிலையில், ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் ஜிம்பாப்வே பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் பிரையன் பென்னட் மட்டும் நிலைத்து 21 ஆடி ரன்கள் எடுத்தார் .
இறுதியில் 12.4 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசி சுபியான் முகீம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, 58 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது . இதனால் 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது .
பாகிஸ்தான் அணியில் உமைர் யூசுப் 22 ரன்களும் , சைம் அயூப் 36 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் அதுவும் 57 ரன்னுக்கு ஜிம்பாப்வே ஆல்-அவுட் ஆகி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“