worldcup | pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் அதன் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதன்பிறகு, அக்டோபர் 10-ம் தேதி இலங்கை அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
விசா கிடைப்பதில் தாமதம்
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வந்துசேருவதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் 9 வெளிநாட்டு அணிகளில் இன்னும் விசா கிடைக்காத ஒரே அணியாக பாகிஸ்தான் உள்ளது. இந்த விசா சிக்கல்கள் காரணமாக இந்தியா வருவதற்கு முன்பு துபாயில் இரண்டு நாள் பயிற்சி முகாமை நடத்தும் திட்டத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) வருகிற திங்கள்கிழமை அன்று தங்களது வீரர்களுடன் துபாய்க்கு சென்று, ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சி முகம் நடத்தவும், பின்னர் புதன்கிழமை அங்கிருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏற திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு லீக் சுற்று போட்டிகள் தொடங்கும் முன் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் செப்டம்பர் 29-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும், அக்டோபர் 3-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் துபாயில் தங்குவதை ரத்து செய்ய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது புதன்கிழமை லாகூரிலிருந்து துபாய்க்கு விமானத்தில் செல்வார்கள், பின்னர் அவர்கள் சரியான நேரத்தில் விசாவைப் பெற்றால் அங்கிருந்து ஐதராபாத் செல்வார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் ஐதராபாத் புறப்படுவதற்கு முன் இந்தியாவிடமிருந்து தேவையான விசா அனுமதிகளைப் பெறுவார்கள் என்று பி.சி.பி அதிகாரிகள் நம்புகிறார்கள்.
பாகிஸ்தான் அணிக்கு விசா தாமதம் ஒன்றும் புதிதல்ல. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதட்டத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் நிறுத்தியதில் இருந்து நாடுகளுக்கு இடையிலான பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரே ஒரு இருதரப்பு தொடர் மட்டுமே நடந்துள்ளது. மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2012-13ல் இந்தியாவுக்கு பயணம் செய்தது.
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இருதரப்புத் தொடருக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றது.
2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானின் முதல் இந்தியா பயணம் இதுவாகும். அப்போது அந்த அணியின் விளையாடிய இடது கை சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான முகமது நவாஸைத் தவிர, பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் உள்ள மற்ற அனைத்து வீரர்களுக்கும் இது இந்தியாவுக்கான முதல் பயணமாகும்.
நசீம் ஷா காயம் - ஹசன் அலி மீண்டும் வாய்ப்பு
இதனிடையே, ஆசிய கோப்பை தொடரின் போது காயம் அடைந்த நசீம் ஷாவுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதான அவர் பாகிஸ்தான் 2017ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது போட்டியின் சிறந்த வீரராக இருந்தார். ஆனால் நசீம், ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் முக்கிய வேகத் தாக்குதலை உருவாக்கியதால் அவரது இடத்தை இழந்தார். உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் நசீமுக்கு பதிலாக ஹசன் சிறந்த தேர்வாக இருப்பதாக தலைமை தேர்வாளர் இன்சமாம்-உல்-ஹக் கூறினார்.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, சவுத் ஷகீல், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஹரிஸ் ரவூப், முகமது வாசிம்
ரீசர்வ் வீரர்கள்: ஜமான் கான், அப்ரார் அகமது, முகமது ஹாரிஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“