'எல்லா போட்டியும் துபாயில்... இந்தியாவுக்கு தான் பெரிய சாதகம்': கம்மின்ஸ் தாக்கு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pat Cummins India have got the obvious benefit of playing all games in Dubai

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விமர்சித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. 

Advertisment

இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில், 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா,  நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. 

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியா ஆடும் அரையிறுதியும், அதில் இந்தியா வெற்றிபெற்றால் இறுதிப்போட்டியும் துபாய் மைதானத்தில்தான் நடைபெறும். இதேபோல், இந்தியாவுக்கு லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அரையிறுதியில் மோதப் நியூசிலாந்துடன் தான் அந்தப் போட்டி நடக்கிறது. 

மார்ச் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் முதல் அரைஇறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும். அதற்கு முன்னதாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) அன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி அரைஇறுதிக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.  

Advertisment
Advertisements

கம்மின்ஸ் தாக்கு 

இந்த நிலையில், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விமர்சித்துள்ளார். கம்மின்ஸ் தனது இரண்டாவது குழந்தை பிறந்ததற்காக வீட்டில் இருக்கவும், கணுக்கால் காயம் காரணமாக ஓய்வெடுக்கவும் சாம்பியன்ஸ் டிராபியைத் தவறவிட்டுள்ளார். 

இந்திய அணி  குறித்து யாஹூ ஆஸ்திரேலியா ஊடகத்திடம் கம்மின்ஸ் பேசுகையில், "சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து நடைபெறுவது நல்லது. அதேசமயம், இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கிறது. ஏற்கனவே வலுவாக இருக்கும் இந்திய அணி, தங்களின் அனைத்து போட்டிகளை இங்கே விளையாடுவதால் கூடுதல் பலனைப் பெறுகிறது.

எல்லாம் நடந்து முடிந்து வீட்டில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது கணுக்கால் மறுவாழ்வு நன்றாக கண்காணிக்கப்படுகிறது, எனவே நான் இந்த வாரம் ஓடவும் பந்துவீசவும் தொடங்குவேன். ஐ.பி.எல் அடுத்த மாதம் உள்ளது, பின்னர் நாங்கள் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தைப் பெற்றுள்ளோம், எனவே எதிர்நோக்குவதற்கு நிறைய இருக்கிறது." என்று கூறினார். 

கம்மின்ஸ் போலவே, எல்லா போட்டிகளும் துபாயில் நடைபெறுவது இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் நாசர் ஹுசைன், மைக்கேல் அதர்டன் ஆகியோரும் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Pat Cummins Indian Cricket Team Champions Trophy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: